Thursday 9 January 2014

அடிசில் 75

பயற்றம் பலகாரம்
- நீரா -


தேவையான பொருட்கள்:
வறுத்து இடித்த பயற்றம் பருப்பு மா - 3 கப்
தேங்காய்த் துருவல் - 1½ கப்
வெள்ளை எள் - 1 கப்
சீனி - 3½ கப்
தண்ணீர் - 1 கப் 
மிளகு - 1 தேக்கரண்டி
சின்னச்சீரகம் - 1 தேக்கரண்டி
ஏலப் பொடி - ½ தேக்கரண்டி 
பட்டர் - 2 தேக்கரண்டி
உப்பு - சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு

தோய்க்கும் மாவிற்குத் தேவையான பொருட்கள்:
வெள்ளைப் பச்சை அரிசி - 1¼ கப்
கோதுமை மா - ½ கப் 
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 
தேங்காய்ப் பால் மா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. தோய்க்கும் மாவிற்குத் தேவையான வெள்ளைப் பச்சை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
2. தேங்காய்த் துருவல், எள், மிளகு, சீரகம் நான்கையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து இடித்துக்கொள்க. 
3. இவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு பயற்றம்மா, பட்டர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்க.
4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரைவிட்டு சீனியும் சேர்த்துக் காய்ச்சவும்.
5. காய்ச்சும் பாகில் குமிழிகள் தோன்றும் போது, கையில் மெல்லிய கம்பியாக இழுபட்டு அறுந்து போகும் பருவத்தில் [மெல்லிய கம்பிப்பாகு] கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கரண்டியால் கிளறி குழைத்துக் கொள்க.
6. குழைத்தமாவை எண்ணெய் பூசிய பலகையில் இட்டு அரை அங்குலத் தடிப்பில் அழுத்தமாகப் பரவி சூடாக இருக்கும் போதே விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்க.
7. ஊறவிட்ட அரிசியின் நீரை வடித்து தோய்க்கும் மாவிற்குத் தேவையான மற்றப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு தோசைமாப்பதத்தில் அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்க.
8. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
9. பயற்றம் பலகாரம் எண்ணெய்யில் மூழ்கிப் பொரியக்கூடிய அளவிற்கும் கூடுதலாக எண்ணெய் இருக்க வேண்டும்.
10. குழைத்து வெட்டி வைத்துள்ள துண்டுகளை தோய்க்கும் மாவில் தோய்த்து, தொதிக்கும் எண்ணெயில் இட்டுப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
1. எண்ணெய் ஒரே அளவான சூட்டில் கொதிக்க வேண்டும். சூடு குறைந்தால் பலகாரம் எண்ணெய்யாக இருக்கும்.
2. மெல்லிய கம்பிப் பதமாக பாகு இருக்க வேண்டும்.  கையில் தடித்த கம்பியாக உடையும் பதமானால் பலகாரம் கல்லுப்போல் கடினமாக இருக்கும். 

No comments:

Post a Comment