Tuesday 14 January 2014

ஆசைக்கவிதைகள் - 84


உல்லாசப் படகோட்டு மச்சியே!

















இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் பிரச்சனையை உருவாக்கும் தீவாக இப்போது  கச்சதீவு இருக்கிறது. பண்டைக் காலத்தில் இத்தீவில் கடல் ஆமைகள்  தமது முட்டைகளை இட்டு மூடிச்செல்ல, அம்முட்டையில் இருந்து வெளிவரும் ஆமைக் குருகுகள் ஆயிரக்கணக்காக அங்கே உலாவந்தன. அதனைக் கண்ட நமது முன்னோர் அதனைக் கச்சதீவு என்று அழைத்தனர். இதேபோல் பண்டை நாளில் மதகநாட்டு மேலைக் கடற்கரைப் பட்டினத்தின் துறைமுக நகரம் பிருகுகச்சம் என்ற  பெயரால் அழைக்கப்பட்டது. அதனை இப்போது பரூக் என்கிறார்கள். கச்சம் என்றால் ஆமை. பாண்டிய அரசர்கள் கச்சம் [ஆமை] பொறித்த காசுகளையும் கச்சவடிவிலானா காசுகளையும் வெளியிட்டார்கள். அந்தக் காசுகள் கச்சக்காசு என்றும் அழைக்கப்பட்டன. சில கிராமியக் கதைகள் கச்சதீவை ஆமைத்தீவு என்றும் கூறும்.

தெளிவில்லாத பிராமி எழுத்துக்கள் கொண்ட கச்சக்காசு 

திருமால் ஆமைவடிவம் எடுத்து மந்திரமலையைத் தாங்கியதை
“கால் ஆழ்ந்து அழுந்திக் கடல் புக்குழி கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்புமான”                  - (சுந்தரகாண்டம் 40: 1)
எனச் சொல்லும் இராமாயணம் கச்சம் என்று ஆமையைக் குறிக்கிறது. ஆனால் கச்சதீவு பற்றி குறிப்பிடும் நம்மவர்கள் சிங்களத்தில் கச்ச என்றால் கசப்பு அங்கு உள்ள தண்ணீர் கச்சலாக இருந்ததால் கச்சதீவு என்றார்கள் என்று எழுதுகிறார்கள். சிறிய தீவுகள் யாவும் கச்சல் தண்ணீர் உள்ளதாகவே இருக்கின்றன. அதற்காக எல்லாத் தீவுகளையும் கச்சதீவு என்றா அழைக்கிறோம்?

இந்தியாவில் இருந்து வரும் வியாபாரிகளிடம்  பச்சை மணி, பவள மணிகளை வாங்கத் தீவுப்பகுதிப் பெண்கள் கச்சதீவுக்குப் படகில் சென்றிருக்கலாம். நெடுந்தீவுக்கு அருகே கச்சதீவு இருப்பதால் இந்நாட்டுப் பாடல் சுட்டும் பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவராய்  இருக்கலாம். அவளை கச்சதீவில் கண்ட அவளது மச்சான் இப்பாடலைப் பாடியிருக்கலாம். காத்தாடல், மச்சி, பாத்துவாங்கு, உச்சி வெய்யில், உல்லாசம், உருக்குலைதல்,  நச்சுதல் போன்ற சொற்கள் யாழ் தீவுப்பகுதி மக்களின் பேச்சுவழக்கில் உள்ள சொற்களாகும்.

மச்சான்:
உச்சி வெய்யில் காயயில
         உல்லாசப் படகோட்டு[ம்]
மச்சியே! உருக்குலைந்து
          போனேன் உனைநச்சியே!

கச்சதீவு கடக்கரையில் 
     காத்தாட வந்த மச்சியே!
பச்சமணி பவளமணி
        பாத்துவாங்கு மச்சியே!
                                                   -  நாட்டுப்பாடல் (தீவுப்பகுதி - கச்சதீவு)
                                                      (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment