Thursday 2 January 2014

குறள் அமுது - (84)


குறள்:
“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை”                                       - 488  

பொருள்:
பகைவரைக் கண்டால் மிகவும் பணிவாக நடக்கவும். அவர்களுக்கு அழிவுகாலம் வரும்போது நிலைமை தலைகீழாக மாறும்.

விளக்கம்:
தமிழனாய்ப் பிறந்த திருவள்ளுவர் தமிழ்க்குடி பெருமையுடன் வாழ அரிய பெரிய கருத்துக்களை திருக்குறளில் பல இடங்களில் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று 
“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை”                                         - 488 

எனும் இத்திருக்குறளாகும். 

இக்குறள் 'காலமறிதல்' என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக இருக்கிறது.  இறுவரை என்பது அழிவுகாலத்தைக் குறிக்கும். தம்மிலும் வலிமை மிக்க செறுநராகிய பகைவரைக் கண்டால் அவர்களின் பகைமை எண்ணம் நீங்கும் படி அவர்களை உங்கள் தோளிலிலோ தலையிலோ சுமப்பதுபோல் சுமக்கவும். அதாவது பணிவாக நடக்கவும். அவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் அவர்கள் எம்மேல் கொண்ட பகைமையை, அப்பகைவரை நன்கு அறிய அது உதவும். அப்பகைவருக்கு அழிவுகாலம் வரும்போது நிலைமை தலைகீழாக மாறும் என்கிறார். எமக்கு ஏற்ற காலம் வரும்வரை எமது எதிரியைப் பணிந்து, பகைமையை வெளிப்படுத்தாது காத்திருக்கச் சொல்கிறார்.

இக்குறளுக்கு ஏற்ப பணிவாக நடப்பதாகக் காட்ட ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்’ எனக்கூறி, ஆயுதங்களை இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்த போதும், தான் எடுத்துக்கொண்ட செயலை நிறுத்தமாட்டேன் என்பதை ‘போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறப்போவதில்லை’ எனப் பலரும் அறிய அறிவிக்கப்பட்டதே, சுதுமலைப் பிரகடனமாகும். 

அதிலும் ஆயுதங்களை எல்லாம் ஒப்படைத்து வெறுங்கையுடன் நின்றாலும், எமது இலட்சியம் மாறாது என்பதை தெட்டத்தெளிவாக இந்திய வல்லரசிற்கு, அவர்களது  அமைதிப் படையினரைப் பார்த்துச் ஈழத்தமிழ்மக்களைச் சாட்சியாக முன்நிறுத்திச்   சொல்லியதால் சுதுமலைப் பிரகடனம் வரலாற்று முக்கியம் உடையதென அரசியல் ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். சின்னஞ் சிறிய இலங்கைத் தீவில் தன்மானமுடைய தமிழினமும் வாழ்கிறது, அது தமிழீழம் என்னும் உயர்ந்த இலட்சியத்துடன் வாழ்கிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றிய நாளும் அதுவேயாகும். 

இந்நாளில் காலம் வரும்வரை காத்திருக்க எவரால் முடியும்?

No comments:

Post a Comment