Saturday 9 November 2013

என்ன சத்தோம்

நாடா [Photo: source Wikipedia]

மனித வாழ்வுக்கு மிகவும் தேவையான பொருட்டகள் மூன்று. அந்த மூன்றையும் நம் முன்னோர் உணவு, உடை, உறையுள் என்ற மூன்று ‘உனா’க்களில் அழைத்தனர். ‘ஆடை இல்லாதவன் அரைமனிதன்’ என்ற  பழமொழியும் அதனால் எழுந்தது. அவர்கள் பலவிதமான ஆடைகளை நெய்தனர் அவற்றில் ஒன்று பருத்தி ஆடை. பருத்திச் செடியில் இருந்து கிடைக்கும் பருத்திப் பஞ்சை நூலாக நூற்றனர். அதற்கு சாயம்போட்டு பலநிறங்களில் பருத்தி நூல்களை உண்டாக்கினர். 

அந்தப் பருத்தி நூல்களைக்கொண்டு  பல நிறப்பருத்தித் துணிகளை நெய்து எடுத்தனர். துணிகளை தறியில் நெய்வதற்கு வேண்டிய பாவு நூலைப் பெண்களும், ஊடு நூலைப் பிள்ளைகளும் தடியில் சுற்றி வைப்பர். நூலைச் சுற்றும் பொழுது களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடிப் பாடி சுற்றுவர்.  இது அந்நாளில் மன்னாரில் வாழ்ந்த பெண்கள் தம் பிள்ளைகளுடன் சேர்ந்து பாடிப்பாடி நூல் சுற்றிய கிடைத்தற்கு அரிய நாட்டுப்பாடலாகும்.  

இந்த நாட்டுப்பாடலில் தமிழுக்கே உரிய இரட்டைக்கிளவி [ஒரே ஒலியுடைய இரு சொற்கள் இணைந்த சொல் இரட்டைக்கிளவி எனப்படும். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பொருள் காண முடியாது.] பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் நாட்டுப்பாடலில் அரிதாகவே காணக்கூடிய ஒன்றாகும். இந்நாட்டுப்பாடலில் வரும் கலகல, கடகட, கொறகொற, கொதுகொது, சலசல, சடசட, படபட, பறபற என்ற எட்டு இரட்டைக்கிளவியையும் ஒலியின் வேறுபாட்டை சிறு பிள்ளைகளுக்கு உணர்த்தவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சாயவேர்ச் செடி 

நூல் நுணக்கும் என்றால் நூலை நுண்மையாக திரித்தல். அதாவது நூல் நூற்றல். நாட்டுவழக்கில் நுணக்கு என்பர். இது கைவினைத் தொழிலாளர் பயன்படுத்தும் சொல்லாகும். சாயவேர் என்பது ஒருவகைச் செடி. அரையடி உயரம் வரை வளரக்கூடியது. வெள்ளை நிறப்பூ பூக்கும். இதன் வேரிலிருந்து செந்நிறச் சாயத்தை நம் முன்னோர் எடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது மன்னார் யாழ்ப்பாணத்து தீவுப்பகுதி போன்ற இடங்களில் இருந்து வெளிநாட்டிற்கு சாயவேர் ஏற்றுமதி செய்யப்பட்டது. சாயவேரைக் கொத்தி எடுத்தோரை அவர்கள் செய்த வேலைக்கு அமைய வேர்க்கொத்திகள் என அழைத்தனர். அன்றைய நெசவுத்தொழிலுக்கு அவர்கள் வளம் சேர்த்தனர்.   இந்த நாட்டுப்பாடல் ஈழத்தமிழரின் நெசவுத்தொழில் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது.

பெண்களும் பிள்ளைகளூம்: 
          கலகலக்குது என்ன சத்தோம்
          காத்தசையிற பஞ்சு சத்தோம் 
          காத்தசையிற பஞ்சு சத்தோம் 

          கடகடக்குது என்ன சத்தோம்
          நூல்நுணக்கு பஞ்சு சத்தோம் 
          நூல்நுணக்கு பஞ்சு சத்தோம் 

          கொறகொறக்குது என்ன சத்தோம்
          சாய்வேர் கொத்து சத்தோம்
          சாய்வேர் கொத்து சத்தோம்

          கொதுகொதுக்குது என்ன சத்தோம்
          சாயவேர் கொதிக்கு சத்தோம்
          சாயவேர் கொதிக்கு சத்தோம்

          சலசலக்குது என்ன சத்தோம்
          சாயநூல் அலசு சத்தோம் 
          சாயநூல் அலசு சத்தோம்

          சடசடக்குது என்ன சத்தோம்
          சாயநூல் காயும் சத்தோம்
          சாயநூல் காயும் சத்தோம்

          படபடக்குது என்ன சத்தோம்
          பாவில்நூல் ஓடு சத்தோம்
          பாவில்நூல் ஓடு சத்தோம்

          பறபறக்குது என்ன சத்தோம் 
          பருத்திதுணி பறக்கு சத்தோம்.
          பருத்திதுணி பறக்கு சத்தோம்.
                                 -  நாட்டுப்பாடல் (மன்னார்)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறிப்பு:
தறியில் நீள் வாக்கில் இருக்கும் நூலைப் பாவு நூல் என்றும், பாவு நூலுக்குக் குறுக்காக மேலும் கீழும் செல்லும் நூலை ஊடு நூல் என்றும்  அந்த ஊடு நூல் சுற்றிய கட்டையைப் போடும் கருவியை நாடா [Suttle with bobin] என்றும் அழைப்பர்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment