Tuesday 19 November 2013

ஆசைக்கவிதைகள் - 79

பால் எடுக்கு நேரத்தில!
[Photo: source Wikipedia]

கேகாலையில் இருந்த ஒரு இரப்பர் தோட்டத்தில் அழகிய பெண்கள் ரப்பர் மரத்தைக் கீறி பால் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் அழகை ரசித்து மகிழும் தொப்பித்துரை என்பவன் அப்பெண்களைச் சீண்டுவதற்காக அங்கே வந்தான். அவனுக்கு முன்னே அவனது பெரிய தொந்தி [தொம்பை] தொங்கிக் கொண்டு நின்றது. அவர் வருவதைப் பார்த்திருந்த அப்புகாமி என்பவர் தொப்பித்துரையிடம் ஓடிவந்து ‘இப்ப தோட்டத்துரை வாரார் ஆனபடியால் அந்தப் பெண்களைச் சீண்ட நேரம்  சரியில்லை’ என்கிறார்.

தோட்டத்துரை வாரார் என்பதைக் கேட்ட தொப்பித்துரை ஓட்டம் பிடித்தான். ரப்பர் தோட்டங்கள் மலைப்பாங்கான இடமாதலால் அவன் ஓட அவனின் தொம்பை மேழும் கீழும் தொங்கிக் குலுங்க நிலை தடுமாறி விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் இருந்த கருங்கற்கள் அவனின் தொம்பையைக் கிழித்துவிட்டது. அவனது தொம்பை கிழிந்ததைப் பார்த்துச் சிரித்த ரப்பர் தோட்டத்து பெண்களின் பாடல் இது. 

இந்தப்பாடல் ரப்பர்த் தோட்டத்து துரைமார், அங்கே வேலை செய்யும் பெண்களைச் சீண்டியதைக் காட்டுவதோடு, அந்தச்சீண்டலை எதிர்க்கத் துணிவில்லா விட்டாலும், துரைமாரைக் கிண்டல் அடித்து பாடிச் சிரிக்கத்துணிந்த பெண்களாக தமிழ்ப்பெண்கள் இருந்ததையும் ஒரு வரலாற்றுப் பதிவாக எமக்குச் சொல்கிறது.

பெண்கள்: ரப்பர் மரக்காட்டு உள்ள
                            பால் எடுக்கு நேரத்தில
                  தொப்பிதுர வந்தாரு
                            தொம்பதொங்க நின்னாரு

                  ஆள் வரவ பாத்திருந்த
                            அப்புகாமி ஓடியந்து
                  தோட்டதுர வாராரு
                           தோதில்ல என்னாரு

                  தொப்பி துர ஓடயில
                           தொம்ப தொம்பி ஆடயில
                  தப்பி விழுந்தாரு
                            தொம்ப கிழிஞ்சாரு
                                                                   -  நாட்டுப்பாடல் (கேகாலை)
                                                                                 (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment