Friday 8 November 2013

குறள் அமுது - (79)


குறள்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”                                  - 1
பொருள்:
எழுத்துகளுக்கு தொடக்கமாகவும் அவற்றுடன் கலந்தும் அகரம் இயங்குவது போல உலகம் ஆதிபகவனைத் தொடக்கமாகக் கொண்டு இயங்குகிறது.

விளக்கம்:
அகரம் என்று சொல்லப்படும் ‘அனா’ என்ற எழுத்து எழுத்துகளுக்கு முதலாவதாக இருக்கிறது. அத்துடன் அவ்வெழுத்தின் ‘அ’ என்ற ஓசை, தமிழ் எழுத்துக்களான உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து யாவற்றுடனும் சேர்ந்து முதலில் ஒலிக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல உலகில் உள்ள ஒலிகள் யாவற்றுள்ளும் ‘அ’ எனும் ஒலி கலந்தே நிற்கிறது.

ஆக்குதல், செய்தல் என்றால் ஒன்றை தோற்றுவிப்பதாகும். முதன்முதலில் ஒன்றை ஆக்கியவன் ஆதியானவன். ஆதி என்பது தொடக்கம், மூலம் என்ற கருத்தைத்தரும். பகவன் என்னும் சொல் வடமொழிச்சொல் அல்ல தமிழ்ச்சொல்லே. பகு எனும் வினை அடிச்சொல்லால் பிறந்தது. பகு, பகுத்தல் அதாவது பிரித்தல். எல்லா உயிர்க்கும் பகுத்து கொடுப்பவனே பகவன். இன்னொரு வகையில் சொல்வதானால் எமக்கு எல்லாம் படி அளப்பவன் பகவன். 

கடவுள் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிறமதங்கள் தோன்றத்தோன்ற அம்மதங்களை உருவாக்கிய தலைவர்களும் பகவன் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். உதாரணமாக தற்காலத்தில் வாழ்ந்த சத்திய சாயி பாபா கூட பகவன் என அழைக்கப்பட்டார். இவர்களில் இருந்து இறைவனைப் பிரித்துக்காட்டவே ஆதிபகவன் என்ற பெயரால் அழைத்தார்.  

அகரம் எல்லா எழுதுக்களுக்கும் முதலாவதாகவும் ஏனைய எழுத்துக்களொடு கலந்தும் நிற்பது போல ஆதியாகிய இறைவனும் உலக தோற்றத்திற்கு முதலாகவும், உயிர்கட்கு உயிராகவும், உயிரற்ற பொருட்களை இயக்கும் இயக்கனாகவும் நிற்பான் எனக்கூறும் குறள். 

No comments:

Post a Comment