Thursday 25 April 2013

மனதிற்கு ஓர் உபதேசம்

தெய்வம் உண்டென்று இரு!


மனிதமனம் ஒரு குரங்கு போன்றது. அது நிலையாக ஓர் இடத்தில் நிலைத்து நிற்காது. குரங்கு கிளைக்கு கிளை, மரத்திற்கு மரம் தாவித்திரிவது போல மனமும் எமது ஆசைகளுக்குத் தக்கபடி ஒன்றைவிட்டு மற்றதற்கு தாவித்திரியும். அப்படித் தாவித் தாவி அலைபாய்ந்து திரியும் மனதிற்கு எவராவது உபதேசம் செய்து அடக்கி வைக்க முனைந்திருக்கிறார்களா? 

தன் மனதிற்கு உபதேசம் செய்தவர்களில் சிவவாக்கியரும் ஒருவராவார். ‘மனமே! மனிதகுலம் ஒன்று. தெய்வமும் ஒன்றுதான். தெய்வம் உண்டு என்பதை நம்பு. பெரிய செல்வம் எல்லாம் என்றும் நிலைத்து இருப்பவை அல்ல. ஆதலால் செல்வத்தை போற்றாது இரு. பசித்தவர்கட்கு தேவையான உணவைக் கொடுத்துக் காப்பாற்று. நல்ல அறச்செயல்களும் நட்பும் நன்மை தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள். எப்பொழுதும் நடுநிலைமையில் இருந்து நீங்காதே. எமக்கு எது கிடைக்குதோ, அது போதும் என்று எண்ணிக் கொள். இதுவே நான் உனக்குச் செய்யும் உபதேசமாகும்.’ என்று அவர் கூறியுள்ளார்.

சிவவாக்கியர் அவரின் மனதிற்கு செய்த உபதேசத்தை நீங்களும் படித்துப்பாருங்கள்.

“ஒன்று என்று இரு தெய்வம் உண்டு என்று இரு 
             உயர் செல்வம் எல்லாம் 
அன்று என்று இரு பசித்தோர் முகம் 
             பார்நல் அறமும் நட்பும் 
நன்று என்று இரு நடு நீங்காமலே 
             நமக்கு இட்டபடி
என்று என்று இரு மனமே 
             உனக்கு உபதேசம் இதே!

சிவவாக்கியர் தமது மனதிற்குச் சொன்ன உபதேசத்தை நாமும் எமது மனதிற்குச் சொல்லலாமே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment