Tuesday 23 April 2013

உலகுயிர் நேயம் வேண்டுவீரேல்!

மார்கழி மாத மழையதுவால்
மாநில மெங்கும் நீர்ஓட
ஊர்ந்து திரியும் எறும்புகளும்
உணவு இன்றி தாம்வாட
பார்த்து அறிந்த பாவையரும்
பதமாய் அரிசியை இடித்து
மாக்கோலம் இட்டார் மண்மீது
மாவைக் கண்ட எறும்புகளும்
மளமள என்று மாவெடுத்து
மகிழ்ந்து உண்டிருந்தன காண்!

மானுட நேயம் வெந்து
மாண்டதினால் சுண்ணக் கல்லை
மாவாக்கி கோலம் போடும் 
மங்கையர் தாமும் அறியாரோ?
சுண்ணக் கல்லின் மாவதனால் 
மண்ணின் தன்மை பாழாக
மற்றுள உயிர்கள் வீணாகும்
உலகுயிர் நேயம் வேண்டுவீரேல்!
மங்கலக் கோலமிடு நங்கையரே!
மாக்கோலம் இடுவீர் மண்மீதே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment