Sunday 21 April 2013

குறள் அமுது - (62)


குறள்:
“வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு”                         - 552

பொருள்:
அரசாட்சி என்னும் அதிகாரத்தை வைத்திருப்பவர் பொருள் கேட்பது, வழிபறி கள்வர் வேலைக்காட்டி பொருளைக் கொடு எனப்பறிப்பது போன்றது.

விளக்கம்:
இக்குறள், கொடிய அரசாட்சி நடக்கும் நாட்டில் அரசாங்கம் குடிமக்களைத் துன்புறுத்தி வரி அறவிடுவதை, கொள்ளைக்காரரின் செயலுடன் ஒப்பிட்டுச் சொல்கிறது. வேல் என்பது இங்கு ஆயுதத்தைக் குறிக்கும். கோல் என்றால் நீதி. அரச சேவகர்கள் தண்டணைக் கோலுடன் சென்று குடிமக்களிடம், தொட்டதற்கெல்லாம் வரி செலுத்து எனக் கேட்டு பிடுங்குவதும் வழிபறி கொள்ளைக்காரர் வேலைக்காட்டி வெருட்டிப் பிடுங்குவதும் சமமாகும்.  இரந்து கேட்பதை இரவு என்று சொல்வர். இங்கு  இரவு இரந்து கேட்டல் என்ற பொருளில் வரவில்லை. தொல்லை கொடுத்தல் என்ற கருத்தையே தருகின்றது. இரத்தல் இங்கு அரசாட்சியின் கொடுங்கோன்மையை சுட்டி நிற்கிறது.

வழிபறி கொள்ளக்காரர், தனிவழியே செல்வோரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆயுதத்தைக் காட்டி தெருட்டி, வெருட்டி கையிலுள்ளவற்றைத் தா எனப்பறித்தல் போன்றதே ஒரு நாட்டின் தலைவன் நீதி என்ற பெயரில் ஆட்சி அதிகாரங்களைக் காட்டி, அரச பயங்கர வாதங்களால், அடக்கு முறைகளால் குடிமக்களைத் துன்பப்படுத்தி அவர்களிடமுள்ள பொருட்களைப் பறித்து எடுப்பது. 

கொடுங்கோன்மை நடக்கும் நாட்டில் வாழும் மக்கள் தம் உயிரை, தமது உற்றாரின் உயிரைக்காக்க உடமைகளைக் கொடுப்பர். அந்த மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் தம் குடும்பத்தினருக்காகவும், நண்பர்க்காகவும், தம்மோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தார்க்காகவும் தமது படைபலத்தால் கொலை வெறியர்களைக் கொண்டு பணம், பொருள், பொன், வீடு, நிலம் என்பனவற்றை மட்டும் பிடுங்கி எடுப்பதில்லை. பெண்களையும் உயிரற்ற பொருளாக நினைத்து பறித்து இழுத்துச் செல்வதோடு கடத்தியும் செல்வர்.

கொள்ளைக்காரர் கூட தமக்கு தேவையான பொருள் கிடைத்தால் அது முடியும்வரை மீண்டும் கொள்ளையடிக்கார். ஆனால் அரசுகளோ எந்நாளும், எவ்விடத்தும் தம் ஆட்சி அதிகாரத்தைக்  காட்டும். திருவள்ளுவரின் இந்தக்குறளுக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சிகள் இப்போது இலங்கையில் நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment