Wednesday 28 March 2012

எங்கே நிம்மதி

நம்மை நாமே வாழ்க்கைப் போராட்டத்திலும் வேலைப் பழுவிலும்  மெல்ல மெல்லத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் ஏற்படும் மனவேதனையில் எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி என நிம்மதியைத் தேடுகிறோம். உண்மையில் நிம்மதி நம்மிடமே இருக்கின்றது. அதைத்தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. நிம்மதி வேண்டுமாயின் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஓய்வு அவசியம். உடலுக்கு முழுமையான ஓய்வைக் கொடுப்பது நித்திரையே.

முன்பெல்லாம் மனிதர் உடலால் உழைத்து வாழ்ந்தனர். ஒவ்வொரு நாளும் பெருந்தூரம் நடந்தனர். அதனால் அவர்களால் நன்றாக நித்திரை கொள்ள முடிந்தது. இந்தக் கணினி யுகத்தில் பெரும்பாலும் இருந்த இடத்திலேயே வேலை செய்கிறோம். மனிதனின் உடல் உழைப்பு குறைந்து மூளைக்கு வேலை கூடிவிட்டது. உடல் உழைப்பு இல்லாததால் நித்திரைக்கும் மருந்து குடிக்க வேண்டிய நிலையில் வாழ்கிறோம்.
நித்திரை இன்மைக்கு பொதுவாக உடல்நலக் குறைவு, மனஉளைச்சல் (கோபம், பொறாமை, பயம், காதல் போன்ற உணர்வுகள்) காரணம் என்றாலும் வேறுகாரணங்களும் இருக்கின்றன. இக்காலப் பழக்கங்களான 
  1. நேரம் போவது தெரியாது தொலைக்காட்சி பார்ப்பது.
  2. செல்போனில் மணிக்கணக்கில் பேசுவது.
  3.   வலைத்தளத்தில் அரட்டை அடிப்பது.
  4.   அதிக உணவை வயிறு புடைக்க உண்பது.
  5.   உண்ணாமலே உறங்குவது.
போன்றவைகளும் நித்திரையைக் குறைக்கின்றன.
நித்திரை குறைந்தாலும் கூடினாலும் உடல்நிலை பாதிக்கப்படும். மெலட்டோனின் (melatonin) என்னும் ஓமோன் சுரப்பதாலேயே எமக்கு நித்திரை வருகின்றது. அந்த ஓமோன் அதிகமாகச் சுரந்தால் நித்திரையும், குறைவாகச் சுரந்தால் நித்திரை இன்மையும் ஏற்படுகின்றது.  அவ்வோமோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாகவும் சுரக்கின்றது. ஆதாலால் இருளான இடத்தில் நன்றாக நித்திரை கொள்ளலாம்.
மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் ஓய்வைக் கொடுத்து புத்துணர்ச்சியைத் தருவது நித்திரையே. நித்திரைக்கும் ஞாபகசக்திக்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். ஆழ்ந்த நித்திரை கற்கும் ஆற்றலைக்கூட்டும். படித்து களைத்திருக்கும் மூளை நித்திரையால் புத்துணர்ச்சி பெறுகிறது. அதனால் காலையில் எழும்பும் பொழுது ஞாபக்சக்தியும் கூடுகிறது. சோர்வு, கவனக்குறைவு, மறதி போன்றவை நித்திரை இன்மையால் உண்டாகின்றன. 
மனவுளைச்சல்களால் வரும் மன அழுத்தத்தின் போது கோர்டிசோல் (cortisol) எனும் ஓமோன் சுரக்கின்றது. அதனால் நித்திரை இன்மை ஏற்படுவதோடு இரத்த அழுத்தமும் கூடும். அது இரத்த நாடிகளில் கல்சியப்படிவை உண்டாக்கி அவற்றைத் தடிப்படையவும் செய்யும். அதனால் இருதய நோய்க்கு நித்திரை இன்மை காரணமாகின்றது. எனவே மனித வாழ்க்கைக்கு நித்திரை மிகவும் முக்கியமாகும். நித்திரையின் போது சுரக்கும் ஓமோன்கள் உடலின் கொழுப்பைக் குறைத்தல், தசைகளைப் பழுது பார்த்தல், தோலைப்புதுப்பித்தல் போன்றவற்றைச் செய்து உடலின் வளர்ச்சிக்கும் நோயற்ற வாழ்வுக்கும் உதவுகின்றன. 
உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா? கவலைகளை ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு சூடான பாலில் 2 தேக்கரண்டி தேன்விட்டு கலக்கிக் குடியுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள சத்தம் இல்லாத, இருளான இடத்தில் உறங்குங்கள். உங்கள் இமைகள் நித்திரையைத் தழுவ, நிம்மதி உங்களைத் தழுவிக்கொள்ளும்.     

No comments:

Post a Comment