Saturday 31 March 2012

அக அழகு


ஒருவரின் அக அழகை முகமே காட்டுகின்றது. அதனாலேயே எமது பண்டைத் தமிழ்ப் பெரியோர்கள் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” எனும் முதுமொழியை எம்மிடையே விதைத்துச் சென்றனர். எனவே முகத்தை அழகுடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதரின் முகத்திலும் ஏதோ ஓர் அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. அவரவரது சிகை அலங்காரத்தைப் பொறுத்து அழகு கூடும், குறையும். மிகப் பெரிய காதுள்ளவர்கள் காதை தலைமுடியால் மறைத்து தலையலங்காரம் செய்ய அவர்கள் அழகு கூடும். இப்படிச் சின்னச் சின்ன மாற்றங்களால் உங்கள் அழகை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம். 
அலங்காரமே மனித நாகரீகத்தின் ஆணிவேர். அலங்காரம் என்பது ஒரு தனிப்பெரும் கலை. நாம் நம்மை ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டிய விடையங்கள் நிறையவே இருக்கின்றன. சாதாரணமாக வீட்டில் இருப்பது போல் வேலைக்குச் செல்லமுடியாது. மணப்பெண் அலங்காரத்துடனும் போகமுடியாது. எனவே நாம் எங்கு செல்கிறோம் என்பதைப் பொறுத்தே எமது ஒப்பனை அமைய வேண்டும். முக அமைப்பிற்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு ஒப்பனை இருக்க வேண்டும். மற்றவர் செய்கிறார் நாமும் அவர் போல் செய்வோம் என்று செய்யக்கூடாது. ஒப்பனை செய்திருக்கிறோம் என்பதே தெரியாது முகம் மிக இயல்பாக இருப்பது போல் தெரியவேண்டும். 
ஒப்பனைப் பொருட்டளை வாங்கும் போது உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக எண்ணெய்த் தன்மை உள்ளதா வறண்டதா என்பவற்றை பார்த்து வாங்க வேண்டும். விலை அதிகமானது தோலிற்கு நல்லது என்று எண்ணாது பரிசீலனை செய்து வாங்குங்கள். அதுபோல் விலை குறைவாக இருக்கின்றது என்பதற்காக உங்கள் தோலிற்கு பொருத்தம் இல்லாதவற்றையும் வாங்காதீர்கள். அதனால் தோல் பாதிக்கப்படும். முதலில் கையில் பூசி அலர்ஜியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அழகு சாதனப் பொருட்கள் நாட்செல்ல நாட்செல்ல பழுதடைவதால் அவற்றை வாங்கும் பொழுது சிறிய அளவில் வாங்குவது நல்லது. 
முகத்திற்கு பூசிய அலங்காரத்தோடு இரவில் நித்திரை செய்யக்கூடாது. படுக்கைக்குப் போகுமுன் முகத்தை நன்கு கழுவி ஒப்பனையை போக்கிக் கொள்ளவும். முகத்தில் பருக்கள் வருவதற்கு முக அலங்காரப் பொருட்களும் ஒரு காரணமாகும். முகத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதற்கு முகத்தைக் கழுவித் துடைத்த பின்பு உறங்குவது நல்லது.

அக அழகு என்பது முக அழகு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. உங்கள் நடை, உடை, நாகரிகத்துடன் பொதறிவு, நளினம், அன்பு, பண்பு இரக்கம் எல்லாம் சேர்ந்த ஓர் அரிய கலவையே அக அழகாகும். நன்கு வயது முதிர்ந்த கிழவிகள் பொக்குவாயுடன் சிரிப்பதே மனதை கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கின்றதே! அது ஏன்? அன்பிலும் பண்பிலும் முதிர்ந்ததினால் அவர்கள் அழகாய் இருக்கிறார்கள். ஆகவே அன்பும் பண்பும் எம்மைவிட்டு அகலாது பார்த்துக் கொண்டால் அக அழகு தானாகவே மிளிரும்.   

No comments:

Post a Comment