Wednesday 14 March 2012

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 1

திருப்பெருந்துறை

பக்தி என்றால் என்ன? இறைவனிடம் உள்ள அளவையில் அடங்காத அன்புக்கு பக்தி என்று பெயர். பற்று பரிவு, பாசம், நேசம், காதல் என அன்பை பல வகையாக்கி பல பெயர்களால் சுட்டுகிறோம். அந்த அன்பின் முதிர் நிலையே பக்தியாகும். நாம் ஒன்றின் மேல் வைக்கும் பற்றே பக்தியாகிறது. ஒன்றைப் பற்றுதல் என்றால் பிடித்தல். எப்போது நாம் ஒன்றைப் பற்றிப் பிடிப்போம்? நாம் நிலை தடுமாறும் போதே எமக்கு உறுதுணையாக ஒன்றை பற்றுவோம். நாம் பற்றிப்பிடிக்கும் பொருள் மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும். எமது உடல் கீழே வீழாதிருக்க உறுதியான பொருளைப் பற்றிப்பிடிப்பது போல் எமது உயிராகிய ஆன்மாவும் தான் வீழாதிருக்க ஓர் உறுதிப் பொருளைப் பற்றுகிறது. ஆன்மா பற்றிப்பிடிக்கும் உறுதிப்பொருளை நாம் கடவுள் அல்லது இறைவன் என்று சொல்கிறோம். 

நாம் வீழாமல் நிலைதிருக்க அதாவது நாம் பிறந்து பிறந்து இறக்கும் நிலையாமையைப் போக்க இறைனைப் பற்றவேண்டும். அதனை திருவள்ளுவர்
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்ப
ற்றுக பற்று விடற்கு” 

என பற்றே இல்லாத இறைவனின் பற்றினைப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படி இறைவனின் பற்றினை பிடித்துக் கொண்டு மற்றைய பற்றுக்களை அதாவது ஆசைகளை விட்டுவிடுங்கள் என்கிறார். தமிழர் பற்றே பக்திக்கு வழிவகுப்பதையும், பக்தி முற்றி முத்தியாவதையும் உணர்ந்தனர். பக்தி முத்தி தரும் என்பது பண்டையோர் முடிபு. தம் அநுபவ உணர்வுகளை அடியவர்கள் பக்தனாய்ப் பாடினார்கள். அவர்கள் பாடிய பக்திச்சுவை பக்தி இலக்கியமாக தமிழ்மொழியில் வளர்ந்துள்ளது. உலகப் பொருளைப் பற்றி நீளநினைந்து நினைந்து உருகி ஏங்கிய ஆன்மா, இறைவனைப்பற்றி நினந்து ஏங்கி ஏங்கி ஏக்கற்று உருகின்றது. நித்தலும் கைதொழுகின்றது. கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உலகப்பொருளை நினைந்து நினைவாலே சுவைத்த ஆன்மா, இறைவன் திருவடிப் போதினை நினைந்து நினைந்து சுவைக்கின்றது. அந்தச்சுவையே பக்திச்சுவை. அச்சுவையின் அநுபவ வெளிப்பாடே திருவாசகம்.

"முத்திக் குழன்று முனிவர் குழாம் நனிவாட
அத்திக்கருளி அடியேனை ஆட்கொண்டு
பக்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடி தெள்ளேனம் கொட்டாமோ”

என பக்திக்கடலுள் பதிந்து கிடக்கும் தனது அனுபவத்தை மணிவாசகர் திருவாசகமாக வெளிப்படுத்தி உள்ளார்.அந்த திருவாசகத் தேனை எமக்கு அளித்த மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகேயுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் அவர் வாதவூரர் என்றும் அழைக்கப்பட்டார். வாதவூரரின் அறிவு, ஆற்றல் என்பவற்றை அறிந்த பாண்டியஅரசன் அவரைத் தனது முதல் மந்திரி ஆக்கினான். திருக்கோவையார் பாண்டிய அரசனின் பெயரை வரகுணபாண்டியன் என்றே குறிக்கின்றது. அரிமர்த்தனபாண்டியன் எனச்சொல்வார் சிலர். இருவரும் ஒருவரா? அன்றேல் இருவரா?] அரேபியக் குதிரைகள் விற்பனைக்கு வந்திருப்பதை அறிந்த பாண்டிய மன்னன் அவற்றை வாங்கி வரும்படி பெரும் பொருள் கொடுத்து வாதவூரை அனுப்பினான். அவர் குதிரை வாங்க திருப்பெருந்துறைக்குச் சென்றார்.

திருப்பெருந்துறை குருந்தமரம் (காட்டெலுமிச்சை)















அங்கே குருந்தமர நிழலில் சிவாகமத்தை ஓதும் மாணவர்கள் பலர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே மலர்ந்த முகத்துடன் மாமுனிவர் ஒருவர் வீற்றிருந்தார். அம்முனிவரின் கையில் சிவஞானபோதம் எனும் ஞானநூல் இருந்தது. அதனைக்கண்ட வாதவூரர் மகிழ்ச்சி அடைந்து அம்முனிவரை வணங்கினார். அம்முனிவனும் வாதவூரரின் பக்குவநிலையைக் கண்டு திருவைந்தெழுத்தை உபதேசித்தார். அப்படி இறைவன் குருவடிவாக வந்து தன்னை ஆண்டு கொண்ட திறத்தை வாதவூரர் 

“கோகழியாண்ட குருமனிதன் தாள் வாழ்க"  
                                       - (சிவபுராணம்)
என்றும் 
அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையை”           
                                                                     - (போற்றித் திருவகவல் 75-76)
என்றெல்லாம் திருவாசகத்தில் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.
வாதவூரர் குதிரை வாங்கக் கொண்டு சென்ற பொருளை எல்லாம் குரு சேவைக்கும் சிவனடியார்கட்க்கும் செலவு செய்துவிட்டார். அதனை அறிந்த பாண்டியன் கோபங்கொண்டு வாதவூரரை பிடித்து வரும்படி ஆட்களை அனுப்பினான். தான் செய்த பிழையை உணர்ந்த வாதவூரர் மாமுனிவரிடம் சென்று என்ன செய்வது என்று கேட்டார். அந்த மாமுனிவர் ‘ஆவணி மூல நட்சத்திரத்தில் குதிரைகள் வரும்’ என அரசனுக்குச் சொல்லுமாறு கூறி தனது பக்தனை அனுப்பி வைத்தார்.

சொன்னது போல் குறித்த நாளில் குதிரைகள் வந்தன. இறைவனே குதிரைப் பாகனாக வந்தார். அதனை                                                                      
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசை
     சதுர்படச் சாத்தாய் தானெழுந்து அருளியும்
என வாதவூரரே கூறியுள்ளார்.

குதிரைகளைப் பார்த்த அரசனும் மகிழ்ந்தான். ஆனால் அன்றிரவே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி ‘ஊளையிட்டு’ மதுரை மாநகரை ஒரு கலக்கு கலக்கின. அதனால் அரசன் வாதவூரரை சிறையில் அடைத்தான். சிறையில் அவர்படும் துன்பத்தைக் கண்ட இறைவன் வையை ஆற்றை பெருகச் செய்தார். வீட்டுக்கு ஒருவர் வந்து வையை வெள்ளத்தை அடைக்கவேண்டுமென அரசன் ஆணையிட்டான். 
உறவு என்று சொல்ல எவருமில்லாது, வயதானபோதும் பிட்டு அவித்து விற்கும் பிட்டு வாணிவிச்சி ஒருத்தி மதுரையில் வாழ்ந்து வந்தாள். அரசன் ஆணையை நிறைவேற்ற அவள் கூலியாள் தேடியும் ஆள் கிடைக்கவில்லை. இறைவனிடம் முறையிட்டாள். அவள் வேண்டுகோளுக்கு இரங்கி இறைவரே கூலியாளாக வந்தார். தன் வேலைக்குக் கூலியாக பிட்டு வாணிவிச்சியிடம் இருந்து உதிர்ந்த பிட்டை வாங்கி வயிற்றை நிறைத்தபடி அணையைக் கட்டாது ஆடியும் பாடியும் மண்சுமக்கும் கூடையை தலையணையாக வைத்து மரநிழலில் படுத்தும் வீணாக காலம் கழித்தார். 
அதைக்கண்ட கண்காணிப்பாளன்  பாண்டிய மன்னனிடம் தெரிவித்தன். பாண்டியனும் கூலியாள் முதுகில் பிரம்பால் அடித்தான். அவ்வடி எல்லா உயிர்கள் மேலும் விழுந்தது. அடித்த அரசன் முதுகிலும் விழுந்தது. கூலியாளோ இருந்த இடம் தெரியாது மறைந்து போனான். பாண்டியன் திருவருளை எண்ணி வியந்து வாதவூரரை சிறையிலிருந்து விடுதலை செய்தான். இவற்றை எல்லாம் 
“நரியைக் குதிரைப் பரி ஆக்கி 
          ஞாலம் எல்லாம் நிகழ்வித்துப் 
பெரிய தென்னன் மதுரை எல்லாம் 
          பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்”      - (திருவாசகம்: 50: 7)
என்றும்
பிட்டு நேர்ப்பட மண் சுமந்த
          பெருந்துறைப் பெரும் பித்தனே”           - (திருவாசகம்: 30: 2)
எனவும்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்”   - (திருவாசகம்: 8: 8)
எனவெல்லாம் தன் பக்தி அநுபவங்களை மணி வார்த்தைகளாகக் கூறியதால் வாதவூரர் மணிவாசகராக மாணிக்கவாசகராகப் போற்றப்பட்டார். 
இறைவனை எவரும் பக்தி செய்யலாம் என்பதற்கு மிக இலகுவான சுவையான வழிகளை மாணிக்கவாசகர் எமக்குக் காட்டித் தந்துள்ளார். எமது நெஞ்சத்திலே விதவிதமான உணர்வுகளும் உள்ளக்கசிவுகளும் புதைந்து கிடக்கின்றன. அவைகளுள் நன்மை தருவன பலவும் தீமை செய்வன சிலவும் இருக்கின்றன. அவற்றுள் எமக்கு கேடு தரும் இயல்புகளைக் கையாண்டு இறைவனை அடையலாம் என்று திருவாசகம் செப்புகிறது. மற்றைய நெறிகளிலே மனிதர் தம்மிடம் உள்ள கேடுகளை அகற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். ஆனால் பக்திநெறியிலே எதை அகற்றுவது என்ற கேள்வி எழுவதில்லை. ஆதலால் நம்மிடமுள்ள கெட்ட குணங்களால் எப்படி பக்தி செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment