Monday 26 March 2012

குறள் அமுது - (26)


குறள்:
“செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனின் கூரியதில்”                                 - 759
பொருள்:
பொருளை உண்டாக்குங்கள். ஏனெனில் பகைவரின் செருக்கை அறுக்கக் கூடிய கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு ஒன்றும் இல்லை.

விளக்கம்:
'பொருள்செயல் வகை' என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது திருக்குறள் இது.  செய்தல் என்பது உண்டாக்குதல், தேடுதல், பெருக்குதல் ஆகிய கருத்துக்களைத் தரும். நோயுற்ற போதும், இயற்கையின் அழிவுகளால் போர்களால் நாட்டில் பஞ்சம் வந்த போதும் முதுமை அடைந்த போதும் எமக்கு உதவும் என்றோ, ஏழை எளியோர்க்கு, உற்றார் பெற்றோர்க்கு கொடுக்க என்றோ நாம் பொருளைத் தேடவேண்டுமென பலரும் பலவிதமாகக் கூறுவர். 
ஆனால் வள்ளுவரோ இக்குறளில் பகைவரின் கொட்டத்தை அடக்க பொருளைத் தேடுங்கள் என்று கூறியதோடு அவர்களின் திமிரை அறுக்கும் கூர்மையான ஆயுதம் பொருளே என்பதையும் எமக்குக் காட்டித் தந்திருக்கிறார். எதிரியின் மமதையை அறுத்து எறிய பொருளைவிடக் கூர்மையான ஆயுதம் இல்லையாம். எஃகு என்பது இக்குறளில் ஆயுதம் என்ற பொருளில் வந்துள்ளது.
எமது குடும்பம், எமது நாடு, எமது தேசம், எமது இனம் என எமது வட்டம் விரியும் போது பகைமையும் விரியக்கூடும். உங்களுக்கு பகைவர் இருக்கிறார்களா? அவர்களின் செருக்கை அறுத்து எறிய நீங்கள் விரும்புகிறீர்களா? பொருளை தேடக்கூடிய வழிவகைகளை அறிந்து பொருளைப் பெருக்குங்கள். நீங்கள் தன்நிறைவு அடைந்த பின்பும் பொருள் வளத்தை வளர்ப்பதால் பகைவரது செருக்கைச் சிதைக்க முடியும். உங்களது தொழில் வளர்ச்சியும், பணப்பெருக்கமும் பகைவரை அடங்கி ஒடுங்க வைக்கும்.
தமிழனாய் தமிழனுக்கு என்று தமிழினத்துக்கு வள்ளுவன் சொன்ன இக்கருத்து மனித இனத்துக்குப் பொதுவானது. பகைவரின் கொட்டத்தை அடக்கி ஒடுக்கி செறுக்கை அறுத்து எறிய பொருளைவிடக் கூரான ஆயுதம் வேறில்லை, ஆதலால் பொருளைப் பெருக்குங்கள்.

No comments:

Post a Comment