Wednesday 25 July 2012

முத்திக் கனியே! என் முத்தமிழே!!



பிறப்பைக் கண்டு மகிழும் நாம் இறப்பைக் கண்டு துவள்கின்றோம். காரணம் என்ன? நாம் பார்த்துப்  பேசிப் பழகி, அன்பு செலுத்தி மகிழ்ந்த ஒருவர், நிரந்தரமாக எம்மைவிட்டு இல்லாது ஒழிகின்றார். மீண்டும் எப்போ, எப்பிறவியில் அவரின் அன்பை பண்பை நாம் காண்போம்? அந்த ஏக்கத்தால் எமக்கு மிஞ்சுவதோ வெறுமை. மனவெறுமையில் நாம் தவிப்பது நன்றா? அது எமக்கு என்ன நன்மையைத் தரும்? நாம் அதனை சிந்திப்பதில்லை. அன்பும் பாசமும் எம் சிந்தையின் தெளிவை சிதறடித்து விடுகின்றது.

பிறப்பு உண்டேல் இறப்பும் உண்டு. பிறந்தது யாவும் இறக்கும். அதுவே இயற்கையின் நியதி. உலக இயற்கையை இயக்கும் சக்தி எம்மையும் இயக்குகின்றது. அச்சக்தி அழிவற்றது.  நாம் அதனை அடிக்கடி மறந்து மமதையில் ஆழ்கின்றோம். அச்சக்கி எம்முள் சேர்ந்து கொள்வதை நாம் பிறப்பு என்கிறோம். அச்சக்தியின் இயக்கத்தாலேயே இயங்குகிறோம். எம் இயக்கவிசை நின்றதும் நாம் ஆடி அடங்கிய பம்பரமாக வீழ்கிறோம். அதனை நாம் இறப்பு என்கிறோம். 

எம்மை இயக்கும் அவ்வதிசய சக்தியை இறைவன் என அழைக்கிறோம். இறைவனாகிய கண்ணுதலான் உயிர்களை என்ன எல்லாம் செய்விக்கின்றான் என்பதையும், அவன் அப்படிச் செய்வதை அறியும் திறத்தையும் அவனே எமக்கு காட்ட வேண்டும் என்பதையும் திருநாவுக்கரசர்

“ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
          அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
          உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே
          பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே 
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
          காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே

என தேவாரத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

அவனே தன்னை எமக்குக் காட்டுவான் என நாம் சும்மா இருக்கலாமா? அதற்கான தகுதியை நாம் அடையவேண்டாமா? அதற்கு வழி என்ன? ஒன்றைத் தேடினால் தானே அது கிடைக்கும். அழிவற்ற அப்பரம்பொருளை நாம் எப்படித் தேடுவது. தேவர்கள் போல் நாமும் அமுதம் அருந்தலாமா? 

தேவர்களாலும் பரம்பொருளை அறிய முடியவில்லை. ஆதலால் அமுதத்தைவிட சிறந்த பொருள் வேறு ஏதாவது இருக்கின்றதா? இருக்கின்றது. அது ஓர் அற்புதக்கனி. எழுதியவர் யார் என்பதை அறிய முடியாத ‘தமிழ்விடு தூது' அமுதத்தை விடச்சிறந்தது, முத்திக்கனி என்கின்றது. சிந்தையுள் சிவன் இருப்பான். சிந்ததையே புத்தி. புத்தியை மெருகூட்ட முத்தமிழை தேடி உண்ணுங்கள். 

தமிழ்விடு தூது, முத்திக் கனியான முத்தமிழை உண்டால் இறப்பை  வென்று இறைவனை அடையலாம் என்கின்றது.

“தித்திக்கும் தெள்ளமுதே தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்”

என ஒருமுறை சென்று இறைவனை என்னிடம் அழைத்து வா என்கிறது. நாமும் முத்தமிழால் முத்திக்கனி சுவைப்போமா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment