Saturday 28 July 2012

தோல் அழகு 5


நுண்ணுணர்வுள்ள தோல்

மனிதரில் 50% ஆனோர் தோலின் நுண்ணழற்சித் தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். நுண்ணுணர்வு உடைய தோலே அழற்சிக்கு உள்ளாகின்றது. காலநிலை மாற்றமும், சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் ஒவ்வாமையும், நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஒவ்வாமையும் கூட நுண்ணுணர்வு உள்ள தோலின் அழற்சிக்கு காரணமாக இருக்கின்றன. இவற்றுக்கும் மேலாக தோலைச் சுத்தம் செய்யவும், பாதுகாக்கவும் பாவிக்கும் சோப், கிறீம் போன்றவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் தோலில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. எல்லாவிதமான இரசாயனப் பொருட்களும் எல்லோருடைய தோலுக்கும் ஒத்துவராது. 

எனவே நுண்ணுணர்வுள்ள தோல் உள்ளவர்கள் அவர்களது தோலுக்கு அழற்சி ஏற்படுத்தும் இராசயனப் பொருட்கள் சேர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு ஏற்படுத்தும் அழற்சியின் அளவு மற்றவருக்கு இல்லாமல் இருக்கும். எனவே ஒருவர் பாவிக்கிறார் என்று அதே பொருளை நீங்களும் வாங்கிப் போடாதீர்கள். சிலவேளை அது உங்களுக்கு அழற்சியைத் தரக்கூடும். அழகுசாதனப் பொருட்கள் உங்கள் தோலில் அழற்சியை ஏற்படுத்துவதைக் கண்டால் அப்பொருட்களை வாங்கும் பொழுது, அதில் என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்து எந்த இராசாயனப் பொருள் உங்களுக்கு அழற்சியைத் தருகின்றது என்பதை அறிக. புதிய பொருளாக இருந்தால் தோலின் மிகச்சிறிய இடத்தில் பூசி, அழற்சி ஏற்படுகின்றதா என்பதை பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.

இத்தகைய தோல் உள்ளவர்கள் எப்போதும் சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். கொதிநீரில் குளிப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. 

No comments:

Post a Comment