Tuesday 24 July 2012

வாழும்வழி நன்குணர்ந்த 'மாமனிதன்'


முப்பதாம் ஆண்டு நினைவஞ்சலி
25 - 07 - 2012
தோற்றம்:12 - 03 1914           மறைவு: 25 - 07 - 1982
புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தில் வாழ்ந்த முத்துக்குமார் நாகம்மை தம்பதியினரின் மகனாய்ப் பிறந்து வளர்ந்து, புங்குடுதீவு வல்லன்/மடத்துவெளி இராமலிங்கம் தம்பிப்பிள்ளையின் மகள் மகேஸ்வரிதேவியை மணந்து, இல்லறத்தின் பயனாய் பெற்ற மகளுக்கு தமிழரசி எனப்பெயரிட்டு அழைத்தவரும், இலங்கையின் பல இடங்களில் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்து, பல பேரறிஞர்களை உருவாக்கியவருமான அமரர் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழுபெருந் தீவகமும் ஏத்தெடுப்ப
          இனிதோங்கி எழுந்த நல்லோன்
வாழும்வழி நன்குணர்ந்த ‘மாமனிதன்’
          முத்துடையார் மரபில் வந்த
ஆழமிகு பேரறிஞன் ஆறுமுகன்
           பண்டிதனெம் அண்ணல் நாமம்
ஏழ்பிறப்பும் மறப்போமோ எம்இனிய
            வழிகாட்டி! குருவே! வாழி!
  • அவரின் மாணவன் வித்துவான் சி ஆறுமுகம்.

பண்டிதர் என்றால் அவர் ஒருவர் தான்
பாண்டித்தியம் உடையவரும் அவரே தான்
புங்குடுதீவு தந்த ஞானச்செல்வர்களில்
புகழ் பூத்த பொது நலத்தொண்டன்
சிறியேனைப் பெரியோன் ஆக்கினார்
சேவையே வாழ்வாக வாழ்ந்தார்
பண்டிதமணி என்றால் போதும் 
பலமுறையும் பக்தி ததும்ப வணங்குவார்
இளையப்பர் என்றால் இன்பம் ஓங்குவார்
இதயம் நிறைந்த இன்ப ஆசான்
குரு சீட பரம்பரைக்கோர் 
கோதிலாச் சீடர் அவர்
சிந்திப்பார் தெளிந்து பேசுவார்
வந்திப்பார் வாழ்பவரை வாழ்த்துவார்
எந்தப் பொருளையும் எளிதாய் விளக்குவார்
எதிலும் பற்றில்லா இல்லற ஞானி
இறுதிக் காலத்தில் இதயத்தில் என் கைவைத்து
இன்பமாய் உணர்வு தந்தார்
கருகிக்கருகி சிவப்பேற வேகின்ற கட்டையிலே
உருகிக் கிடக்கின்ற போதிலும்
உன் அன்பை மறப்பேனோ உத்தமனே!
உலகம் உள்ளளவும் உன்புகழ் வாழ்க!
  • அவரின் மாணவன் திருப்பூங்குடி ஆறுமுகம்.

எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய்பொறுக்கும்
அத்தன்மைத் தாயதொரு ஆசானை நாமிழந்தோம்!
கற்றவரை மதித்துக் காசினியில் ஏற்றிவைக்கும்
நற்றமிழில் வல்லோனை நாமிழந்து விட்டோமே!
இனத்தார் துயர்துடைக்க எந்நேரமும் முந்தும்
மனத்தானை எண்ணி மனங்கலங்கி நிற்கின்றோம்.
ஈயும் உளங்கொண்டு இரவா உளம் படைத்த
தூயோனை எண்ணிமிகத் துயருழந்து வாடுகிறோம்.
  • அவரின் மாணவி பண்டிதை புனிதவதி பாலசுந்தரம்.

வித்துவனாய் பண்டிதனாய் விரிக்கும் நூல்கள்
          விளக்கும்போக்கில் விரிவுரையின்
தத்துவனாய்த் தர்க்கநூல்கள் சார்ந்தவனாய்
           தனித்துவமாய் தகைசான்ற
அற்புதமாம் ஆய்வுரைகள் ஆற்றும்ஆறு
            அருள்முகமாய் ஆண்டமேனி
பொற்புறவே புகழுடம்பாய் புனிதபாதம்
            போந்ததுவே பொலிவுதானே.
  • அவரின் மாணவன் கவிஞர் நாக சண்முகநாதபிள்ளை.

எனது சிறிய தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களிடம் நான் படித்தேன். எனது சிறுபிராயத்தில் அவர் அடிக்கடி எமக்குச் சொன்ன அவரது பொன்னான சொற்றொடர் ஒன்றை இங்கு சொல்லலாம் என நினைக்கிறேன். 
“பணத்தை செலவு செய்தாலும் மனத்தை செலவு செய்யாதே
மனம் வாசனையானால் வாய்ப்பது முத்து” 
பணம், பொருள் போன்றவை கள்வராலும், நயவஞ்சகராலும் எம்மிடமிருந்து சூரையாடப்படலாம். அதை நினைத்து நினைத்து வருந்தி மன உளைச்சலால், மனதை பேதலிக்கச் செய்து, மனநோயாளர்களாக நாம் ஆகிவிடக் கூடாது. நம் மனதில் வஞ்சகம் பொறாமை போன்ற அழுக்குகள் சேர்ந்து கெட்ட வாசம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மனத்தை அன்பு, கருணை போன்ற நல்லபண்புகளால் நிறைத்து எந்நேரமும் வாசமுள்ளதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்திருப்போருக்கு மன அழுத்தங்கள் இருப்பதில்லை. அவர்களது வாழ்க்கை முத்தாய் ஒளிரும். இப்படிச் சொல்லி எம்மை வாழ்வாங்கு வாழ வழிநடத்திய அவர் ‘ஈழத்து முத்தாவார்’.
  • அவரின் மாணவி மங்கையற்கரசி (காந்தி) மாணிக்கவாசகர்.

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment