Sunday 22 July 2012

பாட்டி! பாட்டி! எங்கே போறாய்? - பகுதி 1

ஆசைக்கவிதைகள் - 38

நாட்டுப் பாடல்கள் யாவும் அன்றைய தமிழரின் வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் தாம் நடந்து செல்லும் நடைப் பயணத்தின் களைப்புத் தெரியாது இருப்பதற்காக வழிநடைப் பாடல்களைப் பாடிச்சென்றனர். அப்பாடல்கள் நொடிகளாகவோ கேள்வி பதிலாகவோ இருந்தன. பெரும்பாலும் சிறுவர்களுடன் நடந்து செல்பவர்கள் எப்படிப்பாடுவர் என்பதை இந்த ஆசைக்கவிதை காட்டுகிறது. முதியோர் சொல்வதில் இருந்து சிறுவர்கள் கேள்வி கேட்பர். சிறுவர்களின் கேள்விக்கு முதியோர் பதில் சொல்வர். அந்தக் கேள்வி பதில் தொடர்கதையாய் நீண்டு செல்லும். பாவற்குளத்து நாட்டுப்பாடலான இப்பாடலும் அப்படிக் கேள்வி பதிலாய் நீண்டு சென்ற ஒரு பாடலே. 

பாட்டி! பாட்டி!
எங்கே போறாய்?
குளத்துக்குப் போறன் 
என்ன குளம்?
பாகற்குளம்
என்ன பாகல்?
குருவிப் பாகல்
என்ன குருவி?
ஊர்க் குருவி
என்ன ஊர்?
மணி ஊர்
என்ன மணி?
கண் மணி
என்ன கண்?
நெற்றிக் கண்
என்ன நெற்றி?
பிறை நெற்றி
என்ன பிறை?
வளர் பிறை
என்ன வளர்?
கரு வளர்
என்ன கரு?
முட்டைக் கரு
என்ன முட்டை?
மீன் முட்டை 
என்ன மீன்?
குளத்து மீன்
என்ன குளம்?
இந்தக் குளம் / பாகற்குளம்.

                                         -  நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                               - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 


எப்படி இந்த நாட்டுப்பாடல் தொடர்கிறது என்பதை அடுத்த ஆசைக்கவிதையில் பார்ப்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment