Thursday 31 January 2013

மானுட வீரமா? விவேகமா?



மனிதநேயம் என்னவென்று அறியாது
மனம்அது இருண்டு மனக்குருடான
மானிடரே! மானுடனெனும் மமதையில்
மரம்அதை வெட்டுதல் வீரமா? விவேகமா?

ஊரெங்கும் உள்ள மரங்களை வெட்டி
ஊர்குருவி தன்னோடு குஞ்சுகள் மாள
ஏறெடுத்தும் பாரா ஏதிலாரே! உங்கள்
ஏகபோக வாழ்க்கை வீரமா? விவேகமா?

ஆறறிவு படைத்தீர்! ஆற்றலும் கொண்டீர்!
ஆனந்த வாழ்வென்று சொல்லி நாளும்
பாரெங்கும் உள்ள பசுமையை அழித்து
பாழாக்குதல் உமது வீரமா? விவேகமா?

பாழான நிலத்தில் நீரற்றுப் போம்
பாழ்நிலம் தன்னில் நீர்அது தேடி
நிழல்அது தேடி நித்தமும் அலைந்து
நுடங்குதல் மானுட வீரமா? விவேகமா?

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment