Wednesday 30 January 2013

ஆசைக்கவிதைகள் - 52

மறக்க மனம் நாடுதில்லை

அந்திவானம் மெல்ல சிவந்தது. அதைக் கண்ட இலுப்பக்கடவையில் வாழ்ந்த இளநங்கை மனமும் துள்ளல் நடை போட்டது.  மாலை நேரம் ஆகும் போது அவளது மச்சான் அங்கு வருவான் என்பது அவளுக்குத் தெரியும். அவன் வருவது அவளைப் பார்க்கவே என்பது ஊரே அறிந்த விடயம். ஆனால் அவளோ ஏதும் அறியாதவள் போல நடந்து கொள்வாள். மாலை நேரம் ஆனதும் அவள் தன்னை அலங்கரித்தாள்.  மெல்லச்சென்று கட்டிலில் சாய்ந்து இருந்தாள். மச்சான் வரும் சத்தம் கேட்டதும் நன்றாகத் தூங்குவது போல் கிடந்தாள். வந்தவன் அவள் அருகே வந்து பார்த்தான். அவள் தனக்காகவே, ஒரு திட்டதுடன் (சூசனம்) பொய்த்தூக்கம் கொள்கிறாள் என்பதை அவன் அறிந்து கொண்டான். அதனால் அவள் கேட்கட்டும் என்று சொல்கின்றான். 

மச்சான்: கண்டு உவக்கும் பூநிறத்தாள்
                     கமலப்புள்ளி மான்குலத்தாள்
               சுரும்பிரையும் பூமுலையாள் இப்ப 
                     சூசனத்தில் நித்திரை காண்

மச்சான்: தங்கக் குடமே
                     தளம்பாத பாற்குடமே
               மங்காத மாணிக்கமே
                     மறக்க மனம் நாடுதில்லை
                                      - நாட்டுப்பாடல் (இலுப்பைக்கடவை)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment