Tuesday 22 January 2013

தாயிருக்கும் இடம் எங்கே?

ஆசைக்கவிதைகள் - 51


கீழேயுள்ள நாட்டுப்பாடல் நெருப்பில் நீரும், கடலில் மேகமும் (மழை), விதையில் வேரும், தெருவில் தேரும், உலகில் ஊரும் இருப்பதாகாக் கூறி, தாய் எங்கே இருப்பாள் என்ற நல்ல பதிலை சொல்லு! சொல்லு! என்று விடுகதை போடுகிறது. அத்துடன் நெருப்பிலிருந்து நீரும், கடலில் இருந்து மழையும், விதையிலிருந்து தாவரங்களின் வேரும் வரும் என்ற விஞ்ஞானக் கருத்துக்களையும் சொல்கிறது. இன்றைய விஞ்ஞான உலகம் நிரிலிருந்து நெருப்பையும், நெருப்பில் இருந்து நீரையும் உண்டாக்கலாம் என்று சொல்கிறது. 

வன்னியின் கிடாப்பிடிச்ச குளத்தில் வாழ்ந்த மக்கள் 1946ம் ஆண்டிற்கு முன்பே அதனைஅறிந்து வைத்திருந்தனர் என்பதை இந்த நாட்டுப்பாடல் எமக்கு அறியத்தருகிறது. கடலில் இருந்து மழையும், விதையில் இருந்து வேரும் வரும் எனும் உண்மையை  வன்னிமக்கள் தமது அனுபவத்தால் கண்டனர் எனக் எடுத்துக்கொண்டாலும், நெருப்பில் நீர் இருக்கும் என்ற உண்மையை எப்படி அறிந்தனர்? விஞ்ஞான அறிஞர்கள் யாராவது அந்நாளில் வாழ்ந்தார்களா? இது பற்றி அறிந்தவர்கள் பதில் தாருங்கள். பெற்ற தாயிருக்கும் இடத்தையும் கண்டுபிடியுங்கள்.

நீரிருக்கும் இடம் எங்கே? 
           நெருப்பல்ல வோ!
காரிருக்கும் இடம் எங்கே
          கடலல்ல வோ!
வேரிருக்கும் இடம் எங்கே
          விதையல்ல வோ! 
தேரிருக்கும் இடம் எங்கே?
          தெருவல்ல வோ!
ஊரிருக்கும் இடம் எங்கே?
          உலகல்ல வோ!
தாயிருக்கும் இடம் எங்கே?
          சொல்லு! சொல்லு!
தட்டாமலே நல்ல பதில்
          சொல்லு! சொல்லு!
                                     - நாட்டுப்பாடல் (கிடாப்பிடிச்ச குளம்)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment