Tuesday 29 January 2013

குறள் அமுது - (53)




குறள்:
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”                       - 202

பொருள்:
கொடிய செயல்கள் தீமைகளை உண்டாக்கி, பலவகையான கேடுகளைத் தருவதால் நெருப்புக்கு பயப்படுவதைவிட கொடிய செயல்கள் செய்யப் பயப்பட வேண்டும்.

விளக்கம்:
‘கொடிய செயல்களைச் செய்ய ஏன் பயப்பட வேண்டும்?’ என உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள். தீயசெயலால் துன்பம் வருகின்றது என்றோ, தீமை விளைகின்றது என்றோ உங்கள் மனம் சொல்லக்கூடும். எந்த எந்தச் செயல்கள் எமக்குத் தீமையை உண்டாக்கும் என நான் நினைக்கிறோமோ அத்தகைய செயல்களைச் செய்ய நாம் பயப்பட வேண்டும். 

நெருப்பு அது பற்றி எரிவதற்கு தகுந்த சூழல் மட்டும் கிடைத்து விட்டால் தொடர்ந்து எரிந்து எல்லாவற்றையும் அழிக்கும். கெட்ட செயல்களும் வளவர்வதற்கு ஏற்ற சூழல் அமைந்துவிட்டால் அதனால் பாதிப்படைந்தோரை மட்டுமல்ல,  செய்யத்தூண்டியோரையும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தோரையும் கூட சேர்த்து அழிக்கும்.

அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
என்பது பாரதியார் பாடல்.

பாரதியார் ஒரு சிறிய நெருப்புப் பொறியை எடுத்து மரப்பொந்தில் பத்திரமாக இருக்கட்டும் என்று வைத்தாராம். அது அக்காட்டையே அழித்துவிட்டதாம். நெருப்பின் தீவிரத்தன்மையில் சிறிய பெரிய நெருப்பு என்ற வேறுபாடு இருக்கிறதா? இல்லையே. தீயசெயல்களிலும் பெரியவை சிறியவை என்ற பேதம் கிடையாது.

நெருப்பு எமக்குத் தேவையான உணவுகளை சமைக்கவும், குளிர் போக்கவும், வெளிச்சத்தை பெறவும் எனப்பலவகையிலும் உதவுகிறது. எனினும் அது எம்மைச் சுடுகிறது, எரிக்கிறது என்று அதனை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? இல்லையே. ஏனெனில் நெருப்பு எமக்கு பல நன்மைகளைச் செய்கிறது. ஆனால் தீய செயல்கள் அப்படிபட்டவை அல்ல. என்றோ அறியாப்பருவத்தில் செய்த தீய செயல்கூட, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் வேறு வடிவமாக வந்து தாக்கும். அதனாலேயே தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார். 

நம் முன்னோர்கள் தாம் கண்ட அனுபவத்தால் தீயவை எவை, நல்லவை எவை என எமக்குப் பிரித்து எழுதி வைத்துள்ளார்கள். கொலை செய்தல், களவு எடுத்தல், பொய்சொல்லல், புறங்கூறல், மது அருந்துதல் போன்ற எத்தனையோ தீய செயல்களை பெரிய பட்டியலிட்டு எமக்காக வைத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றிலிருந்து விலகி வாழ்தல் நன்றாகும்.

நெருப்பில் எம்மை நாமே எரித்துக் கொள்வோமா? அந்த நெருப்புக்கு பயப்படும் நாம் அதைவிடக் கூடிய துன்பங்களை அள்ளித்தரும் கொடிய செயல்களுக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர். 

No comments:

Post a Comment