Thursday 24 January 2013

பக்திச்சிமிழ் - 43

ஒற்றைக் கண்ணால் விழித்திடுமே!

- சாலினி -













சங்ககாலத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் ஓர் அழகிய சித்திர மண்டபம் இருந்தது. அதனை எழுத்து நிலை மண்டபம் என அழைத்தனர். அங்கே பலவகையான ஓவியங்கள் கீறப்பட்டிருந்தன. அவற்றை சென்று மக்கள் பார்த்தனர். அப்படி பார்ப்போரில் சிலர் தமக்கு தெரியாதை தெரிந்தவரிடம் கேட்டனர். தெரிந்தவர்கள் அதற்கு பதில் கூறினர்’ என்கிறது பரிபாடல்.

“என்று ஊழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும் 
இரதி காமன் இவள் இவன் எனா அ
விரகியர் வினவ வினா இறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக்கல்லுரு
ஒன்றியபடி இதென்று உரை செய்வோரும்
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்”            - (பரிபாடல்: 19: 48 - 53)

அந்த சித்திர மாண்டபம், ‘வானத்திலுள்ள சந்திரன் சூரியனுடன் சேர்ந்த சுடர்களாகிய நட்சத்திரங்களையும் பார்த்து எப்போ அவற்றுக்கு அழிவுவரும் என ஆராய்வோரும், இவள் இரதி, இவன் காமன் எனக்காட்டி மயங்கி கேட்போரும், அதற்கு விடை கூறுவோரும், இந்தப் பூனை இந்திரன், இவள் அகலிகை, இவன் எழுந்து சென்ற கவுதமன், இவன் கோபத்தால் உண்டான கல்லுருவம் (அகலிகை) இது என்று ஒவ்வொரு ஒவியங்களையும் காட்டி சொல்வோருமாக’ பல வகைப்பட்ட ஓவியங்களுடன் இருந்தது. 

இப்பரிபாடல் சொல்லும் காமனை, சிவன் எரித்தை இராவணன் தனது சிவதாண்டவ தோத்திரத்தில் 
“கராளபால பட்டிகா தகக் தகக் தகக் ஜ்வலத்
தநஞ் ஜயாதூரரீக்ருத ப்ரசண்டபஞ்ச சாயகே”     - (சிவதாண்டவதோத்திரம்: 7)
என்று பாடியுள்ளான். அதாவது விழித்த நெற்றிக்கண்ணின் தக தக தக எனப் பிரகாசிக்கும் அக்கினிச் சுவாலையால் மன்மதனை எரித்தாராம்.

திருநாவுக்கரசு நாயனாரும் சிவனின் ஒற்றைக் கண்ணே காமனைப் பொடியாய் வீழ்த்தியது என்கிறார்.
“ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்துள்ள
          உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
           வெள்ளப் புணற்கங்கை செஞ்சடை மேல்  
இழித்திடுமே ஏழுலகுந் தானாகுமே
           இயங்கும் திரிபுரங்கள் ஓரம்பினால் 
அழித்திடுமே ஆதி மாதவத்துளானே
           அவனாகில் அதிகை வீரட்டனாமே”             - (பன்.திருமுறை: 6: 4: 6)

காமனை பொடியாகக் எரித்ததை தஞ்சைப் பெரிய கோயிலில் புடைப்புச்சிற்பமாகக் காணலாம். புடைப்புச் சிற்பத்தின் இரண்டாவது வரியில் காமன் சிவனுக்கு கணை தொடுப்பதையும், மூன்றாவது வரியில் காமன் எரியுண்டு வீழ்வதையும், அதற்குப் பக்கத்தில் ரதியும் காமனும் சிவனை வணங்குவதையும் காணலாம். இராவணன் காலம் தொடங்கி இன்றுவரை காமனை எரித்த கதை தமிழர்களால் பேசப்படுகிறது. அதன் காரணம் என்ன? 

No comments:

Post a Comment