Tuesday 31 January 2012

சாக்கியனார்

                          


உயிர்கள் யாவற்றிலும் இறைவன் இருக்கின்றான். அவன் ஒருவனே. அவன் எல்லோருக்கும் பொதுவானவன். இதுவே பண்டைய தமிழர் எமக்கு தந்து சென்றுள்ள சமயக் கொள்கை. சாதி, மத வேறுபாடு இல்லாத ஒரு தனிப்பெரும் மதமாக தமிழர் மதம் நின்ற போதே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ 
என அவர்களால் முழங்க முடிந்தது.
அந்த முழக்கத்தில் இருந்து முகிழ்ந்ததாலே, சைவ சமயத்திலுள்ள திருத்தொண்டர் புராணம் சாதி, மத வேறுபாடில்லாத ஓர் ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. அதனாலேயே சைவசமயம் ஒரு பௌத்தமதப் பிக்குவை அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டும் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் என்பதைக் காட்டுவதே சாக்கியனார் வரலாறு.    காவியுடை அணிந்த பௌத்தபிக்கு, அதுவும் வேளை தவறாது சிவலிங்கத்தை கல்லால் அடித்தார். அவருக்கும் சிவன் அருளினார். இதை பல தமிழ்ச் சைவச்சான்றோர்கள் விதந்து உரைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் தெற்கே இருக்கும் காலடி என்ற ஊரிலிருந்து எட்டு வயது சிறுவன் புறப்பட்டான்.  வடஇந்தியாவரை காலால் நடந்து சென்று இந்திய மதங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். அந்த எட்டு வயதுச் சிறுவனே ஆதிசங்கரர். அத்தகைய ஆதிசங்கரரே கடவுளின் அருளைப்பெற வழி இருக்கிறதா எனத்தடுமாறி, நினைப்பதாலும் தவத்தாலும் பக்திப் பாடல்களைப் பாடுவதாலும் உன்னை அடைய முடியுமா? வில்லால் அடித்தவனுக்கும் (அருச்சுனன்), கல்லால் எறிந்தவனுக்கும் (சாக்கியனார்) அருள் புரிந்தாயே! நான் என்ன செய்தால் உன்னை அடையலாம் எனக் கேட்டதை சிவானந்தலகரி சொல்கிறது.
உழவர்களின் புகழை
“மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை” 
எனப்பாடிய கம்பர் கூட
“எச்சிற்கையால் கல்லெறிந்த கை
சங்கமங்கை சாக்கியனார் கை”                   
                                         - (திருக்கை வழக்கம்: 5)
என்று சாக்கியனார் கையை பதிவு செய்துவைத்துள்ளார். 
ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் இடையே வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும் 
“கல்லினால் எறிந்து கஞ்சிதாமுணுஞ் சாக்கியனார்
நெல்லினார் சோறுனாமே நீள்விசும்பு ஆளவைத்தார்”    
                                          -(ப. திருமுறை: 4: 49: 6)
என்று தமது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே சாக்கியனார் எழாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்பது தெளிவாகின்றது. 
சாக்கியனார் சங்கமங்கை எனும் ஊரில் உழவர் குடியில் பிறந்தார். காஞ்சிபுரத்தில் கல்வி கற்றார். அங்கே பௌத்தமத சங்கத்தாருடன் சேர்ந்து பழகியதால் புத்த பிக்கு ஆனார். இவர் காலத்தில் பௌத்தமதமே காஞ்சிபுரப் பகுதியில் முக்கிய மதமாக இருந்திருக்க வேண்டும். அதனால் யாரும் கவனிக்காதிருந்த சிவலிங்கத்தை தெருவிற்கிடந்த செங்கற் சல்லியால் (உடைந்த செங்கற் துண்டுகள்) அடித்து தனது சைவசமய வெறுப்பைக் காட்டினார். அதனால்  ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தை கல்லால் அடித்த பின்னரே உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டார்.
தேவாரங்களைத் தொகுத்து எமக்கு அளித்த நம்பியாண்டார் நம்பியும் சாக்கியனார் செயலை 
“திகழ்தரு மேனியில் செங்கல் எறிந்து சிவபுரத்து
புகழ்தரப் புக்கவன் ஊர் சங்கமங்கை புவனியிலே”   
                                                    - (ப.திருமுறை: 11)
என திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். 

சாக்கியனார் தமது ஆத்மாவின் தேடலால் சைவநெறி நல்ல நெறி எனக்கண்டார். தமது பௌத்தமதச் சின்னங்களை அணிந்து கொண்டே சிவனை நினைவாலே சுவைக்கத் தொடங்கினார். அதனை பட்டினத்தடிகள்
“கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைந்து எறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள் பிழைத்தின்றே” 
                          - (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை: 25)
எனக்கூறியுள்ளார்.
ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பிச்சாபாத்திரத்தில் பிச்சை எடுத்து உண்பதே அந்நாளைய பௌத்த பிக்குகளின் வழக்கம். சாக்கியனாரும் பிச்சை எடுத்து உண்பதற்காக ஒரு நாள் பல இடங்களில் அலைந்து திரிந்தார். அன்று அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல பசியோ வாட்டி வதைக்க மேலும் சில வீடுகளுக்குச் சென்றார். 

ஒரு வீட்டில் கொஞ்சம் கஞ்சி கிடைத்தது. வெயிலும் பசியும் வாட்டியதால் கஞ்சியை கையால் அள்ளிப் பருகத் தொடங்கினார். சிவலிங்கத்திற்கு கல்லெறியாது கஞ்சி பருகத் தொடங்கியது அவரது ஞாபகத்திற்கு வந்தது. எழுந்து ஓடிச்சென்று எச்சிக்கையால் சல்லிக் கல்லை எடுத்து சிவலிங்கத்திற்கு எறிந்தார். அந்தச் சல்லியுடன் அவர் கையில் ஒட்டியிருந்த கஞ்சிச் சோற்றுப் பருக்கை சிவலிங்கத்தில் விழுந்தது. விழுந்த சல்லி மலரானது. அடுத்த சல்லி, அடுத்த சல்லி என எறிந்த சல்லி யாவும் மலர்களாகக் குவிந்தன. சாக்கியனார் சிவனின் திருவருளில் திளைத்தார். 
இறைவனின் அந்த அருள் திறத்தை,
“.... பொய்த்தவன் காண் புத்தன் மறவாதோடி
எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்”      
                                           - (ப.திருமுறை: 6: 52: 8)
என திருநாவுக்கரசர் போற்றுகின்றார்.
சிவன் தன்னிடம் உண்மையான அன்புடையோர் குற்றம் செய்தாலும் அவற்றைக் குறையாகக் கொள்ளாது,  நல்ல குணமாகக் கருதும் புதுக் கொள்கை உடையவர். அதனால் தான் சிவனின் திருவடிகளை அடைந்து வணங்குவதாக சுந்தரமூர்த்தி நாயனார் தமது தேவரத்தில் கூறியுள்ளார். அப்படி குற்றம் செய்தவர்களில் ஒருவராக சாக்கியனாரையும் காட்டுகிறார் பாருங்கள்.
“நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
       நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்றசூதன் நற்சாக்கியன் சிலந்தி 
          கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றமே செய்யினும் குணமெனக் கருதும்
         கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்...”
                                              - (ப.திருமுறை: 7: 55: 4)
சாக்கியனார் செய்த குற்றத்தைக் குணமாகக் கொண்ட சிவன் நாம் செய்யும் குற்றத்தையும் குணமாகவே கொள்வான் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் எமக்குக் காட்டித் தந்துள்ளார். 

எம்முன்னோர் 'எம்மதமும் சம்மதம்', "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என உலகநேயத்துடன் வாழ்ந்ததால் இன்று நாடற்று வாழுகின்ற நிலைக்கு வந்தோமா? 
தமிழரசி.

No comments:

Post a Comment