Thursday 27 February 2014

பாடித்திரிய நானிருக்கேன்

 



















அக்கம் பக்கம் காடிருக்கு 
அங்கே எந்தன் வீடிருக்கு
பக்கம் சூழ வயலிருக்கு
படுத்துறங்க பாயிருக்கு
களத்து மேட்டு நிலமிருக்கு
கதிர் அறுத்த நெல்லிருக்கு
அளந்து உண்ண உணவிருக்கு
ஆடிக் கறக்க பசுவிருக்கு
எத்தி தின்னும் கோழியிருக்கு
ஒத்துப் பேச கிளியிருக்கு
பொத்தி வளக்க தாயிருக்கு
பாடித் திரிய நானிருக்கேன் 

                                                                     நாட்டுப்பாடல் (விளாங்குளம் - அநுராதபுரம்)
                                                - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

பன்னெடுங்காலமாக அநுராதபுரத்தில் தமிழர் வாழ்ந்தனர். அதனை அங்குள்ள இடப்பெயர்கள் தற்போதும்  பறைசாற்றுகின்றன. அந்தத் தமிழரின் வாழ்வியலை எடுத்துச் சொல்லும் சொல்லோவியமே இந்த நாட்டுப்பாடல். வானொலியோ, தொலைக்காட்சியோ ஏதும் அற்ற அந்தக்காலத்தில் ஒரு சிறு நாட்டுப்பாடலுக்குள் இன்றைய தமிழர் பயன்படுத்தாத எத்தனை அரிய தமிழ்ச் சொற்களை பொதித்து வைத்துள்ளனர்?

அநுராதபுரத்தில் இருக்கும் விளாங்குளத்தில்[விளாங்குளம]வாழ்ந்த தமிழர் - பக்கம் சூழ வயல், களத்து மேட்டு நிலம், கதிர் அறுக்க நெல்லு, அளந்து உண்ண உணவு, ஆடிக் கறக்க பசு, எத்தி தின்னும் கோழி, ஒத்துப் பேச கிளி, பொத்தி வளக்க தாய் என அடுக்கடுக்காய் அடுக்கித் தமிழை மெருகூட்டியுள்ளனர். நம் ஈழத்தமிழ் முன்னோர் தமிழின் அருமையையும் இனிமையையும் மிக நன்றாகவே அறிந்திருந்தனர் என்பதற்கு இந்நாட்டுப்பாடல் சான்று பகர்கிறது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment