Sunday 23 February 2014

என்வீடு

  - எழுதியது வாகீசன் -
பூந்தோட்டத்தின் நடுவே அழகான சின்ன நீரோடை. அதிலே வண்ணப் பறவைகள். அன்னம் நீந்தும் அழகும், தாமரைப்பூவில் கதிரவன் ஒளிக்கதிர் பட்டுத் தெறித்து வரும் அழகும் பார்க்கப் பார்க்கப் பரவசமாகும். இந்தக் கொள்ளை அழகை என் வீட்டின் வரவேற்பறையில் இருந்து பார்த்து இரசிக்க எனக்குப் பிடிக்கும்.
என்வீடு அது ஒரு சுவர்க்கம். எல்லா இடத்திலும் கலையின் அழகைப் பார்க்கலாம். வரவேற்பறை அங்கே அழகே உருவான கண்ணன் ராதை சிலை. அதனடியில் குடம் கவிழ்ந்து நீரோடுவது போல் செய்திருக்கிறார்கள். இரவின் ஒளி வெள்ளத்தில் உண்மையாகவே நீர் ஓடுவது போல் இருக்கும். அத்துடன் சுவரில் பதித்துள்ள மீன் தொட்டி அதிலே உள்ள மீன்கள், பூக்கள் எல்லாமே என்னைக் கவிஞனாக்கிவிட்டன.

வரவேற்பறையைத் தொடர்ந்து சாப்பாட்டறை. அங்கே சிற்பவேலைப்பாடு அமைந்த மேசை. அருகே பெரிய செடி. மரத்தாலான இரண்டடி உயரமான ஓர் யானை. பக்கத்திலுள்ள மேசைவிளக்கில் இருந்து மணிமணியாக எண்ணெய் ஓடிவருவதும், அதன் நடுவேயுள்ள சிலையும் உணவருந்தும் போதும் கண்ணுக்கு விருந்து அளிக்கும்.

என் படிப்பறையில் நான்கு அடி உயரமான நடராஜர்சிலை, அதன் முன்னே பட்டு விரிப்பின் மேல் என் வீணை. இவற்றின் எதிரே நான் இருந்து படிக்கும் மேசை, கதிரைகள். சில நேரம் என் தங்கை சிலை முன் நடனமாட நான் வீணை வாசிப்பேன்.

என் வீட்டில் மூன்று படுக்கை அறைகள். எனக்கும் தங்கைக்கும் தனித்தனியாகப் படுக்கையறை. அவையும் அழகாகா இருக்கும். என் வீட்டில் உள்ள சமையைல் அறை, குளியல் அறை எங்கும் கலையழகு மிளிரும்.
என்வீடு என் தாயின் கலைக்கூடம். நான் என் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் தாயின் மடியில் இருப்பதாகவே உணர்கிறேன். 

[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

No comments:

Post a Comment