Sunday 24 February 2013

பக்திச்சிமிழ் - 47


பத்தியைக் கொடு!
- சாலினி -


தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள காலடி என்னும் இடத்தில் எட்டுவயதுச் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் வாழ்ந்த காலத்தில் இந்தியா முழுவதும் பல் வேறுபட்ட சமயங்களிடையே பகை ஏற்பட்டது. எங்கும் சமயத்தின் பேரால் சண்டைகள் நடந்தன. அச்சிறுவன் அவற்றைத்தீர்க்க  புறப்பட்டான். காலடியில் இருந்து புறப்பட்ட அச்சிறுவன் இந்தியாமுழுவதும் காலால் நடந்து சென்று பல்கிப் பெருகி இருந்த சமயங்களை சைவம், வைணவம், சாக்தம். கௌமாரம், சௌரம், காணபத்யம் என ஆறு சமயங்களாகப் பிரித்தான். அச்சிறுவனே ஆதிசங்கரர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் காலத்தில் கூட இன்று உலகெல்லாம் பேசப்படும் இந்துசமயம் - இந்துமதம் போன்ற பெயர்கள்  இந்தியாவில் இருக்கவில்லை என்பதை ஆதிசங்கரர் வரலாறு காட்டுகிறது.

ஆதிசங்கரர் தாமியற்றிய சிவானந்த லஹரி என்ற நூலில், ‘பரம்பொருளே! உன்னிடம் நான் எதைக் கேட்பேன்? நான் பயன்படுத்தக்கூடிய பொருள் ஏதாவது உன்னிடம் இருக்கிறதா? எனக்கு உணவு தா எனக்கேட்கமுடியுமா? நீ உண்டதோ நஞ்சு. எனக்கு ஆபரணங்களைத் தா எனக்கேட்க முடியுமா? நீ அணிவதோ பாம்பு. நான் உடுப்பதற்கு உடையாவது கேட்க முடியுமா? நீ உடுப்பதோ யானைத்தோல். நான் பிரயாணம் செய்ய வாகனம் கேட்கமுடியுமா? உன்னுடம் இருப்பதோ கிழட்டு எருது. உன்னிடம் இருப்பவை யாவும் எனக்கு உதவாதவையே. ஆதலால் சம்போ மாகாதேவா! உன் பாதகமலங்கள் இருக்கின்றனவே, அவற்றை உணரும் பக்தியைக் கொடு’ எனக்கேட்கிறார். 
“அசனம் கரலம் பாணீகலாபோ
வசனம் சர்மச வாகனம் மஹோக்ஷ:
மம தாஸ்யஸி கிம் கிமஸ்தி சம்போ
தவ பாதாம்புஜ பக்தி மேவ தேஹி”      - (சிவானந்த லஹரி: 87)

குறிப்பு:
சிவனை வழிபடுவது - சைவம்
விஷ்ணுவை வழிபடுவது - வைணவம்
சக்தியை வழிபடுவது - சாக்தம்
முருகனை வழிபடுவது - கௌமாரம்
சூரியனை வழிபடுவது - சௌரம்
பிள்ளையாரை வழிபடுவது - காணபத்யம்.

No comments:

Post a Comment