Tuesday 28 August 2012

காவியமே! நீ உறங்கு!


ஈழத்து நாட்டுப்பாடல்களில் ஒன்றான தாலாட்டு பாடல்கள் தாய்மாரின் அறிவையுயும், கற்பனையையும், நாட்டின் நிலைமையையும் பொறுத்து பாடப்பட்டு வந்தன. அப்படிப் பாடப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் அந்தந்தக் கால ஈழத்தமிழரின் நாட்டு நிலைமையை பண்பாட்டை எடுத்துச் சொல்கின்றன. இந்த நாட்டுப்பாடல் 1940ல் பூநகரியில் பாடப்பட்டு வந்த தாலாட்டுப்பாடலாகும். 

இந்தத் தாலாட்டுப்பாடல் தைப்பூச நாளில் குழந்தையைத் தொட்டிலில் முதன்முதல் வளர்த்துவதையும், குழந்தை பிறந்ததை எல்லோர்க்கும் சொல்வதையும், மாமன் மகனை திருமணம் செய்வதையும், பிறந்த குழந்தைக்கு மாமன் அல்லது மைத்துனன்  சித்திரை மாதத்தில் சீர் கொடுப்பதையும் ஈழத்தமிழர் குறிப்பாக பூநகரியைச் சேர்ந்த தீவுப்பகுதி மக்கள் தமது பண்பாடாகக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.  

ஆரிராரோ! ஆராரோ!
ஆரிராரோ! ஆராரோ!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கண்மணியே! கண்ணுறங்கு! 
காவியமே! நீ உறங்கு!
தைமாதம் பொறந்தவளே!
தங்கவள போட்டுவச்சோம்!
                                       - கண்மணியே! 
மைபூசு கண்ணாளே!
மாவிளக்கே! கண்ணுறங்கு!
தைப்பூசம் வந்தாக்கா
தொட்டிலிடக் காத்திருக்கோம்
வையத்திலுள்ளார்க்கு உம்
வரவு சொல்லிவச்சோம்
வையத்தின் இரத்தினமே!
வடிவழகே! கண்ணுறங்கு!
                                      - கண்மணியே! 
மைத்துனன் மாமன் பையன்
மணமுடிக்க காதிருக்கார்
சித்திரை வந்தாக்கா
சீரோடுதான் வருவார்
நித்திரையில்லாம நீர்
நித்தமும் அழலாமோ!
சிந்தூரப் பசும்பொன்னே!
செம்பகமே! கண்ணுறங்கு!
                                       - கண்மணியே!
                                                  -  நாட்டுப்பாடல் (பூநகரி)
                                   - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

ஈழத்தில் இந்திய அமைதிப்படை இருந்த காலகட்டத்தின் நிலையை எடுத்துச் சொல்லும் இன்றைய தலாட்டுப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்.

கண்மணியே! கண்ணுறங்கு!
காவியமே! நீ உறங்கு!
பொன்முடிசூடிய பூச்சரமே! - என்றன்
பூங்குயிலே! இன்று கண்ணுறங்கு!
                                             - கண்ணுறங்கு!
நாய்கள் குரைகுது இராவினிலே - இந்தி
இராணுவம் போகுது வீதியிலே
வாய்கள் திறக்கவும் கூடாதாம் - எங்கள் 
வாசலில் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுதுபார் - எட்டு
திக்கிலும் போர்குரல் கேட்குதுபார்
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே - நான்
பாலுடன் ஊட்டுவன் வாயினிலே
                                                 - கண்மணியே!
செல் வந்த வேளையில் நீ பிறந்தாய் - இன்று
செல் வந்து உன்னப்பன் போய் முடிந்தான்
வல்லவர் யாவரும் காட்டினிலே - கொடும்
வானரக் கூட்டங்கள் நாட்டினிலே
அப்பன் தமிழ்க்கவி வாணனடா - உன்
அண்ணன் ஒரு புலி வீரனெடா
இப்போது மட்டுமே தூங்கிவிடு! - தமிழ்
ஈழத்துக்காகவே வாழ்ந்து விடு!                              
                                                 - கண்மணியே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment