Wednesday 29 August 2012

உள்ளம் உருக உணர்மின்கள்! - 2



தேவாரம் பாடிய மூவரிலே சுந்தரமூர்த்தி நாயனார் இளவரசனாக வளர்ந்தவர். அதனால் இன்ப வாழ்க்கை வாழ்ந்தவர். தனது இன்பவாழ்க்கைக்குத் தேவையானவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற்றார் என்பதை அவர் பாடிய தேவாரப் பதிகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 

சுந்தரமூர்த்திநாயனார் கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவையாரை திருமணம் செய்து திருவாரூரில் வாழ்ந்து வந்தார். மழை இன்மையால் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழமை போல சுந்தரரும் உணவுக்கு வழி செய்யும்படி இறைவனிடம் கேட்டார். கேட்டதும் கொடுத்தால் யார் கடவுளை நினைப்பார்? எனவே இறைவனும் சுந்தரரிடம் அன்புடையவராய் இருந்த குண்டையூர்க் கிழார் என்பவர் வீட்டில் நெல்லை மலையாக குவித்தார். குண்டையூர்க்கிழாரும் அந்த நெல் மலையை வந்து எடுத்திப்போகும் படி சுந்தரருக்கு செய்தி அனுப்பினார். 

அந்த நெல்மலையை சுந்தரரால் தனியே எடுத்துச்செல்ல முடியுமா? எனவே திருவாரூரில் இருந்து குண்டையூர் செல்லும் வழியில் திருகோளிலி என்னும் கோயிலுக்கு சென்றார். அந்த திருக்கோளிலி இறைவனிடம் ‘கோளிலியில் குடியிருக்கும் பெருமானே! அடியவனாகிய நான் மிகவும் நீளாமாக நினைந்து உன்னை ஒவ்வொரு நாளும் வணங்குவேன். வாள் போன்ற கண்ணை உடையவளான பரவையார் பசித்துன்பத்தில் வாடாதிருக்க குண்டையூரில் கொஞ்சம் நெல்லைப் பெற்றேன். கொண்டு வர ஆளில்லை. அவற்றைக் கொண்டுவந்து சேர்க்க எவருக்காவது கட்டளை இடு’ என்கிறார். இதனையே ‘நீள நினைந்தடியேன்‘ தேவாரம் சொல்கிறது. தேவாரத்தைப் பாருங்கள்

“நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே!”          
                                                - (பன்னிரு.முறை: 7: 20: 1)

நாம் விரும்பும் பெண்ணுக்காக நாமும் குண்டையூரில் நெல்லுப் பெற்று, அவற்றை எடுத்துவர ஆள் இல்லாது இத்தேவாரத்தைப் பாடினால் இறைவனும் ஆட்களை அனுப்பி வைப்பார். நாமோ எதுவித குறிக்கோளும் இன்றி இத்தேவாரத்தை பாடுகிறோம். இதனால் நாம் அடையும் பயன் என்ன? நாம் பாடும் தேவாரத்தின் கருத்து அறிந்து பாடினால் நன்றல்லவா?

இத்திருக்கோயில் தேவாராரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. இக்கோயிலில் சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் இரண்டு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடி இருக்கின்றனர். சுந்தரர் பாடிய பதிகத்தில் கடைசித் தேவாரம் தவிர்ந்த மற்றைய தேவாரம் யாவும் நெல்லைக் கொண்டு வந்து சேர்க்க கட்டளை இடு எனக் கேட்பதாகவே இருக்கின்றன. 

எனவே திருக்கோளிலிப் பெருமானைப் பாடிய சம்பந்தரின்
“நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் அடல்நெஞ்சே அரன்நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே”              
                                                - (பன்னிரு.முறை: 1: 62: 1)
என உள்ளம் உருக இந்தத் தேவாரத்தையோ அன்றேல் அப்பரின்

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன் சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே அடியேனை மறவலே!”                        
                                                 - (பன்னிரு.முறை: 5: 57: 1)
என்ற தேவாரத்தையோ அல்லது

“மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே!”             
                                                 - (பன்னிரு.முறை: 5: 56: 8)
எனும் தேவாரத்தையோ நாம் பாடலாமே!

ஒருவர் எம்மிடத்து எப்படி அன்புடையராக இருக்கிறார் என்பதை நாம் உணரலாமே அல்லாமல் காட்டமுடியாது. அதுபோல் இறையருள் என்பது ஓர் உணர்வு. அதனை எமது நினைவில் நிள நினைந்து நினைந்து சுவைக்கமுடியும். அந்த நினைவின் சுவையை நாம் பக்தி என்கின்றோம். அதுவே பக்திச்சுவை. 

நினைந்து நினைந்து உணர்ந்து
          நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண்
          நீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே
          நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை
          நாயகனே என்று .....”
இறவனை உள்ளம் உருக உணர்மின்கள்.

திருக்கோளிலி கோயிலை திருக்குவளை என்றும் அழைப்பர். இக்கோயில் சுந்தரர் வாழ்ந்த இடமான திருவாரூரில் இருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலும் அவர் நெல் பெற்ற குண்டையூரில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்திலும் இருக்கிறது. இங்கு இருக்கும் சிவலிங்கம் வெண்மணலால் ஆனது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment