Monday 13 August 2012

குறள் அமுது - (41)


குறள்:
“தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றால்லார்  
அவம்செய்வார் ஆசையுள் பட்டு”                           - 266

பொருள்:
தவம் செய்பவர்கள் தமது வேலையைச் செய்கிறார்கள். மற்றவர்கள் ஆசைக்கு உட்பட்டு காலத்தை வீணடிக்கிறார்கள்.

விளக்கம்:
உண்மையாகத் தவம் செய்கின்றவர் யாராய் இருந்தாலும் - துறவறத்தானாய் மட்டுமல்ல இல்லறத்தானாய் இருந்தாலும் கூட தம் காரியத்தை, தம் கடமையைச் செய்பவரே. இன்னொருவிதமாகச் சொல்வதானால் எவர் தனது கடமையை, தனது தொழிலை முறையாகச் செய்கின்றாரோ அவரும் தவம் செய்பவரே. எப்படிப் பார்த்தாலும் தவம் செய்வோர் யாவருமே தம் நலமே பெரிதென எண்ணுவோராவர். கடவுளை அடைவதே அவரது எண்ணம். உலகில் வாழும் மற்றைய உயிர்கள் படும் துன்பம், தவம் செய்வோர் கண்களுக்குத் தெரிவதில்லை. 

ஆதலால் தவம் செய்வோர் யாவரும் தம் வேலையையே செய்கின்றனர். உண்மையாகத் தவம் செய்கின்றவர்கள் நிலையே இப்படி இருக்கும் போது போலித்தவம் செய்வோர் நிலை எப்படி இருக்கும்? அதனையும் திருவள்ளுவர் எமக்காக சிந்தித்து கூறியுள்ளார். உண்மையான தவத்தைச் செய்யும் மனவுறுதியில்லாமல் போலித்தவம் செய்வோர், உலக இன்பங்களுக்கு ஆசைப்பட்டு, தவம் செய்கின்றோம் எனக்கூறி காலத்தை வீணடிக்கின்றனராம். காலத்தை வீணடிப்பதையே அவம் செய்தல் என்கின்றார்.

இப்படி போலியாக தவம் செய்கின்றோம் என நடிப்பவரை நம்பியே, பெரும் பணக்காரர் பலர் தாம் கொள்ளை அடித்த காசை போலிச்சுவாமிமாரின் கால்களில் கொட்டி அவர்களை மேலும் மேலும் மமதையிலும் இன்பங்களிலும் வீழ்த்தி, சுகபோகத்தில் மூழ்கடித்து, காலத்தை வீணடிக்க வைக்கின்றனர். தவம் செய்வோரை தவம் செய்யும்படி விட்டுவிட்டு, பணமிருப்போர்  உண்மையாகத் துன்பப்படுவோருக்கு உதவினால் துன்பப்படுவோரும் மகிழ்வடைந்து தவம் செய்வோரும் அவம் செய்யாதிருப்பர். அதற்காகவே திருவள்ளுவர் இக்குறளை வடித்தார் போலும். 

பிறர் நலனை என்றும் சிந்தித்துப் பாராது, தான் முத்தி அடையவேண்டும் என்ற தன்நலத்தோடு  தமது கருமத்தை செய்வோரே தவம் செய்வோர். மற்றையோர் போலியாக நடித்து வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனர்.

No comments:

Post a Comment