Thursday 2 August 2012

பாட்டி! பாட்டி! எங்கே போறாய்? - பகுதி 2

ஆசைக்கவிதைகள் - 39
பாவற்குளம் - வவுனியா

பேரனும் பாட்டியும் வழிநடைப் பாடலாக பாடிவந்த நாட்டுப் பாடலை முந்திய ஆசைக் கவிதையில் (38) பார்த்தோம். வழி நடந்து செல்லும் களைப்பு தெரியாது இருக்க வழி நடைப் பாடல்களைப் பாடிச் செல்லும் பொழுது குறித்த இடத்தை அடைந்ததும் அவ்விடத்தின் பெயரைக் கூறி அப்பாடலை முடிப்பர். உதாரணமாக முந்திய ஆசைக்கவிதையில் என்ன குளம்? என்ற கேள்வி கேட்கப்படும் போது குளத்தைச் சென்றடைந்தால் இந்தக் குளம் என அப்பாடலை முடிப்பர். அல்லது பாகற்குளம் என்றோ பொரியகுளம் என்றோ கூறி வழிநடைப் பாடலைத் தொடர்வர். மீண்டும் பாகற்குளம் எனக் கூற, என்ன பாகல் எனக் கேள்வி பிறக்கும். ஆனால் பதில் முந்தியது போல் இல்லாமல் வேறு விதமாக வரும். சிறுவர்கள் கேட்ட கேள்வியையே கேட்டாலும் பெரியவர்கள் வெவ்று பொருட்களைக் கூறி அவர்களின் தமிழ்ச்சொல் ஆற்றலின் அறிவை வளர்ப்பர். இப்படிச் சிறுவர்கள் வழிநடைப் பாடல்களைப் பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே பல புதிய தமிழ்ச்சொற்களைத் தெரிந்து கொள்வர். இது நம் தமிழ் முன்னோரின் குழந்தை வளர்ப்புத் திறனைக் கூறுவதோடு அவர்கள் சிறுவர்களின் கல்விக்குக் கொடுத்த முதன்மையையும் சொல்கிறது.

என்ன பாகல்?
பச்சைப் பாகல்
என்ன பச்சை?
மரத்துப் பச்சை
என்ன மரம்?
முதிரை மரம்
என்ன முதிரை?
பூ முதிரை
என்ன பூ?
எருக்கம் பூ
என்ன எருக்கு?
வெள்ளெருக்கு
என்ன வெள்ளை?
பால் வெள்ளை
என்ன பால்?
பசும் பால்
என்ன பசு?
காராம் பசு
என்ன கார்?
மேகக் கார்
என்ன மேகம்?
மழை மேகம்
என்ன மழை?
பருவ மழை
என்ன பருவம்?
பிள்ளைப் பருவம்
என்ன பிள்ளை?
தென்னம் பிள்ளை
என்ன தென்னை?
கீற்றுத் தென்னை
என்ன கீற்று?
மின்னல் கீற்று
என்ன மின்னல்?
இடி மின்னல்
என்ன இடி?
பேர் இடி
என்ன பேர்?
பறவைப் பேர்
என்ன பறவை?
காட்டுப் பறவை
என்ன காடு?
பனங் காடு
என்ன பனை?
கொட்டுப் பனை
என்ன கொட்டு?
முரசு கொட்டு 
என்ன முரசு?
அரச முரசு
என்ன அரசு?
பூ அரசு
என்ன பூ?
முருக்கம் பூ 
என்ன முருக்கு?
முள் முருக்கு
என்ன முள்?
மீன் முள்
என்ன மீன்?
குளத்து மீன்
என்ன குளம்?
இந்தக் குளம்/பாகற்குளம் 
                                               -  நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment