Sunday 19 August 2012

இயற்கை அழகு

ஒன்றை நாம் அழகு என்று கூறும் போது அப்பொருள் பற்றிய உயர்ந்த கருத்தை மற்றவர்க்கு நாம் எடுத்துச் சொல்கிறோம். அழகு என்றால் என்ன? அதன் வரையறை என்ன? எம் கண்ணினுள் கரைந்து எண்ணத்திரையில் விரியும் கவர்ச்சியா அது? எந்த அளவுகோலை வைத்து அழகை அளப்பது? மிக்க கூர்மையான அறிவுள்ளவர்களிடம் கண்ணைத்தவிர வேறு அளவுகோல் இருப்பதில்லை என்பதை திருவள்ளுவர்
“நுண்ணியம் எப்பார் அள்க்கும்கோல் காணும்கால்
கண்அல்லது இல்லை பிற”
எனக் கூறியுள்ளார்.  

அழகு பார்ப்பவர் மனதைக் கவர்ந்து ஒருவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது. ஒருவரது கண்ணுக்கு அழகாகத் தெரிந்தது மற்றவர் கண்ணுக்கு அழகற்றதாகத் தோன்றக்கூடும். எனவே உலகில் உள்ள எவருமே அழகிற்கு வரைவிலக்கணம் கூறிவிடமுடியாது. ஒருவரைப் பார்த்து அழகானவர் என்று சொல்லும் போது அவர் ஆரோக்கியமானவர் என்பதையும் சுட்டாமல் சுட்டுகின்றோம். உண்மையில் மனிதரின் வெளியழகு வேறாகவும் உள்ளழகு (மன அழகு) வேறாகவும் பார்க்கப்படுகின்றது. இவ்விரு அழகும் ஒன்று சேர்ந்து இருப்பது மிகமிக அபூர்வம்.

உலகின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் பேரழகுடையவர்களாக இருக்கவில்லை. எனினும் அவர்களிடம் பெண்மை கலந்த மென்மை இழையோடுவதைக் காணலாம். அவர்களிடம் இருந்த அகஅழகே அவர்களின் தனித்தத்துவத்தை மற்றவர்க்கு எடுத்துக்காட்டியது. அதுவே உலகை அவர்களின் பின் செல்லவைத்தது. இதனால் அழகின் உண்மைத் தன்மை எது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மனித அழகிற்கும் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் என்ன தொடர்பு? ஒரு சிற்பி வடிக்கும் சிற்பத்தின் ஒவ்வொரு உறுப்பும் கணிதமுறைப்படி நேர்த்தியாகவும் கண்ணிற்கு விருந்தாகவும் இருந்தால் அதனை மிக அழகான சிற்பம் என்கிறோம். அதுபோல் மனிதரின் ஒவ்வொரு உறுப்புகளின் தனிப்பட்ட அழகுகள் யாவும் ஒன்று சேர்ந்தே உடலின் முழு அழகையும் உருவாக்கின்றது.

எனவே எமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எமது உடலை அழகு படுத்துவதற்கு முன் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. ‘அழகில் இயற்கை அழகே, செயற்கை அழகைவிட நிரந்தரமானது’. இது மனித அழகிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். உங்களிடம் இருக்கும் அழகிற்கு அழகுசெய்ய, அழகைப்பற்றிய அடிப்படை அறிவு சிறிது இருந்தால் போதும் உங்கள் இயற்கை அழகை நீங்களே மெருகூட்டிக் கொள்ளலாம். முதலில் உங்கள் அழகை நீங்களே எடைபோடப் பழகுங்கள்.

நீங்கள் அமைதியாக வேலையற்று இருக்கும் நேரங்களில் உங்களை நீங்களே அலங்கரித்துப் பாருங்கள். உடை என்றாலும் சரி, ஒப்பனை என்றாலும் சரி எப்படி அலங்கரிக்கும் போது நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் எனக் கருதுகிறீர்களோ அதைப் படம் பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி வெவ்வேறு விதமாக அலங்கரித்து எடுத்த படங்களை வைத்து எதில் நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள். 

உங்களை அலங்கரிப்பதற்கும் உடை உடுப்பதற்கும் இருபது நிமிடம் போதும். அதற்கு மேல் செலவு செய்ய வேண்டாம். முதன்முதல் அலங்காரம் செய்பவர் என்றால் அரைமணி நேரம் போதும். உங்கள் அலங்காரத்தை நீங்களே செய்வதால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மனநிறைவையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கிறது. உங்கள் அழகைப் பேண உங்களுக்கென்ற ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மற்றவரைப் பார்த்து அவர்போல் ஒப்பனை செய்ய வேண்டுமென முயற்சி செய்யாதீர்கள்.

ஒவ்வொரு மனிதரினதும் தோலின் தன்மை, தலைமுடியின் தன்மை, முகவடிவம், கண்ணின் வடிவம், உடல் வடிவம், உயரம், எடை என்பவற்றைப் பொருத்தே அலங்காரங்கள் அமையவேண்டும். நம்மில் பலர் இதைப்புரிந்து கொள்வதில்லை. இவை யாவற்றிற்கும் மேலாக பெண்ணின் அழகிற்கு அழகு சேர்ப்பது நளினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

No comments:

Post a Comment