Monday 27 August 2012

குறள் அமுது - (42)


குறள்:
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை”                               - 244

பொருள்:
இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களையும் பேணிப்பாதுகாக்கும் கருணை உள்ளம் கொண்டோர்க்கு தன் உயிரைப்பற்றிய கவலை இருப்பதில்லை.

விளக்கம்:
இத்திருக்குறள்  ‘அருள் உடைமை’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. எல்லா உயிர்கள் இடத்திலும் கருணை காட்டும் தன்மையே அருளுடைமையாகும். கருணை உள்ளம் கொண்ட அருளாளர்கள் தமது உயிரைக் காத்துக்கொள்ள அஞ்சி ஓடி பதுங்கிக் கொள்ளமாட்டார்கள் என்பதை இக்குறளில் திருவள்ளுவர் சொல்கிறார். நாம் செய்த வினை என்று சொல்லும் போது அது நாம் செய்த செயலைக் குறிக்கிறதல்லவா? எனவே வினை என்பது செயலாகும். ‘இல் என்ப தன்னுயிர் அஞ்சும் வினை’ என்னும் பொழுது உயிருக்காகப் பயந்து நடுங்கும் தன்மை - உயிரைப் பற்றிய கவலை இருப்பதில்லை.  

அன்புள்ள நெஞ்சிலே இரக்கம் பிறக்கும். எவரது நெஞ்சில் இரக்கம் இருக்கின்றதோ அவரது நெஞ்சில் அருள் சுரக்கும். அன்பே அருளுக்கு ஆணிவேர். அருள் சுரக்கும் நெஞ்சம் உள்ளோரே அருளாளர் ஆவர். அன்பு ஒரு பசுவைப் போன்றது.  அன்பெனும் பசு அருளெனும் பாலை மனித மனத்திலே சொரியும். அருளாகிய பாலைச் சொரிந்து உலக உயிர்களைப் பாதுகாப்போரே அருளாளர்கள். 

அருள் ஆள்வார் நெஞ்சம் தன்னைப்போல், தன் இனமும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என எண்ணும். அத்தகையோர் தன்னலம் அற்று பொதுநலம் பேணுவர். பிறரின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவர். அதனால் பிறர்படும் துன்பத்தை தாமே மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர். அது அவர்களுக்குத் துன்பமாகத் தெரிவதில்லை. அத்துன்பத்தை தாம் தாங்குவதால் மற்றையோர் இன்பமாக வாழ்வார்கள் என்று எண்ணி மிக்க மகிழ்வோடு அதனைத் தாங்குவர். அவர்களுக்கு பிறரது துன்பம் மிகப் பெரிதாகத் தெரிவதால் தம் உயிரைப்பற்றிய கவலையோ, ‘அஞ்சினர்க்கு சதமரணம்’ எனும் நிலையோ வருவதில்லை. முதியவராக இருந்தாலும் இளைஞராக இருந்தாலும் தம் வயதுக்கேற்ற ஆசைகளை, இன்பங்களை மறந்து, மற்றவர்களின் நல்வாழ்வுக்காக தம்முயிரையும் கொடுப்பர். 

தாம் பிறந்த தமிழினத்தை தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டும் என்ற அருள் நோக்கில், தம் இன்னுயிர் பற்றிய கவலை சிறுதுமின்றி தம்முயிரை தற்கொடை கொடுத்த நம் ஈழத்து அருளார்கட்கு தமது உயிருக்காக பயந்து சாகும் நிலை அஞ்சும் வினை இருக்கவில்லை. தாம் வாழாது தமிழும், தம் இனமும் வாழ தம்முயிர் ஈந்த செம்மல்களை திருவள்ளுவரும் 'மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்' எனப் புகழ்ந்து போற்றியுள்ளார்.

No comments:

Post a Comment