Wednesday 8 August 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 7

தமிழி எழுதுக்களை உலக நாடுகளில் சென்று காண முன்னர், தமிழர் உருவாக்கிய சில எழுத்து வடிவங்களை அறிதல் நன்று. அதற்கு முதலில் தமிழுடன் அல்லது தமிழுக்கு முந்திய மொழியென பல அறிஞர்களால் நம்பப்பட்ட வடமொழியாகிய சமஸ்கிருதம் பற்றி சிறிது பார்ப்போம்.

இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத்துறை 1887ல் கல்வெட்டுப்பிரிவு என்று ஒன்றை தொடங்கினர். அவர்கள் இந்தியா முழுவதும் இதுவரை ஒரு இலட்சம் கல்வெட்டுகளை படிவெடுத்திருக்கின்றனர். இந்தியாவில் ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்ட போதும் ஒரு இலட்சம் கல்வெட்டுக்களில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்களாகவே இருக்கக் காரணம் என்ன? எவராவது காய்தல் உவத்தல் இல்லாது நடுநிலையோடு சிந்திப்பார்களா? 

உலகில் பேசப்பட்ட மொழிகளில் எத்தனையோ மொழிகள் எழுத்துவடிவங்களைப் பெறாமலேயே அழிந்து இருக்கின்றன. எழுத்துருவைப் பெற்றவையும் கால ஓட்டத்தில் அழிந்தொழிந்து இருக்கின்றன. அழியாது வாழும் மொழிகள் யாவும் ஒன்றிலிருந்து ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்து வருவதை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்வதில்லை. மனிதன் தான் எழுப்பிய ஒவ்வொரு ஒலிக்கும் குறியீடுகளை இட்டு உருவாக்கிக் கொண்ட இடுகுறிகளையே நாம் எழுத்து என அழைக்கிறோம். மொழியானது ஒரு சமுதாயத்தவரிடம் பலகாலம் பேசப்பட்ட பின்பே எழுத்து வடிவைப் பெறும்.

நெடுங்காலம் பேச்சு மொழியாகவே இருந்த மொழிக்கு உதாரணமாக சமஸ்கிருத மொழியை எடுத்துச் சொல்லலாம். ஏனெனில் சமஸ்கிருதம் ஒரு எழுதப்படாத மொழி. இது சமஸ்கிருதமொழி வல்லுநர் மாத்தூர் கிருஸ்ணமூர்த்தி போன்ற அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். சமஸ்கிருதத்திற்கு ‘எழுதாக்கிளவி’ (எழுதாதமொழி அல்லது எழுதாதசொல்) என்ற பெயரும் தமிழில் உண்டு. சம்கிருதம் என்ற பெயரே சேர்த்து உருவாக்கப்பட்டது எனும் கருத்தையே குறித்து நிற்கின்றது. [ Sam (together) + kirtam (created) = Samskirtam]

வேதங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதால் சமஸ்கிருதமே இறைவன் மொழி என்கிறார்களே அது உண்மையா? வேதங்களில் மிகப்பழமையானது இருக்கு வேதம். அதன் காலம் கி மு 1000 என்கிறார்கள். வேதங்களில் எந்த ஓர் இடத்திலும் சமஸ்கிருதம் என்ற சொல்லே இல்லை. 1982ல் அசடிக்கப்பட்ட என்சைக்லோபீடியா பிரிட்டானிக்கா (Encyclopediia Britanica) சமஸ்கிருத மொழிக்கான ஆதாரம் கி பி 150ல் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டே என்கிறது.

சமஸ்கிருதம் உருவாக்கப்பட முன்னர் இந்தியாவுக்கு வடக்கே இருந்து வந்தவர்கள் (ஆரியர்) பேசிய சண்டச (Chandasa) மொழியிலேயே வேதங்கள் எழுதப்பட்டன. அது மட்டுமல்லாமல் பாணினி எழுதிய அஷ்டகம் அல்லது பாணினீயம் என அழைக்கப்படும் சமஸ்கிருத இலக்கண நூலும் சண்டச மொழியிலேயே கி மு 400ல் எழுதப்பட்டது. [‘Indo-Aryan and Hindi’ S K Chatterji, page 63- 64]. எனவே சமஸ்கிருதம் வேதமொழி இல்லை என்பதோடு இறைவன் மொழியும் இல்லையாகிறது. 

மொழிகளுக்கு எழுத்து வழக்கில் இலக்கணம் இருப்பினும் பேச்சுவழக்கில் அவை விரைவாக இலக்கணங்களில் இருந்து வழுவி பிறமொழிகளுடன் கலந்து புதுமொழிகள் உருவாக இடம் தருகின்றன. நம்மொழி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எனைய மொழிகளைப் பேசுபவர்க்கும் அவர்களது மொழிகள் முக்கியமே. பிறமொழி பேசுபவருடன் எமது கருத்தைப் பரிமாற அவர்களது மொழியும் எமக்கு அவசியமே.

ஆதிமனிதன் பேசிய மொழியின் வளர்ச்சியே தமிழாகும். எனவே தமிழை இயற்கையாகத் தோன்றிய மொழி எனக் கூறலாம். பிறமொழிகளைப் பார்த்து உருவாக்கப்பட்ட மொழியல்ல. பிறமொழியிலிருந்து உருவாக்கப்பட்ட மொழிக்கு ஆங்கிலத்தைச் சொல்லலாம். பழைய ஆங்கிலத்தில் கி பி 11ம் நூற்றாண்டில் எழுதபட்டதாகக் கருதப்படும் ஆனால் எழுதியவர் யார் என்பதை அறியமுடியாத ‘Beowulf’ எனும் வீரகாவியமே ஆங்கிலத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. இக்காவியத்தை இன்றைய ஆங்கலத்தில் படித்து அறிய முடியாது.

தமிழ் அப்படிபட்ட மொழியல்ல. பண்டைய தமிழும் இன்றைய தமிழும் மாறிவிடவில்லை. கிறிஸ்த்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் எழுதிய தமிழை இன்றைய தமிழ் தெரிந்த எவரும் வாசித்து அறியலாம். தமிழ் என்றும் மாறாது அன்று போல் இருப்பதுடன் பல வேற்று மொழிகளை உருவாக்கியதோடு வேற்று மொழிச் சொற்களையும் உள்வாங்கி இருக்கிறது. என்னினும் தமிழ் மற்ற மொழிகளின் துணையில்லாது தனித்து இயங்கக் கூடியது. 21ம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த செம்மொழி எனும் உயர் புகழுக்கு அதுவும் ஒரு காரணமாகும். 

எந்தவொரு மொழியும் பிறமொழிச் சொற்களை உள்வாங்கிக் கொள்வதால் அழிந்து போவதில்லை. அதனை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். தொல்காப்பியர் தான் எழுதிய தொல்காப்பியத்தில் திசைச்சொல், வடசொல் பற்றிய குறிப்பைத் தந்துள்ளார்.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப்பனவே திசைச் சொற் கிளவி”
இதில் தொல்காப்பியர் திசைச்சொல் எனக் குறிப்பது செந்தமிழோடு சேர்ந்திருந்த அந்தந்த நாட்டுச் சொற்களையே.
“வடசொற்கிளவி வட எழுத்து ஒரீ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே”
வடக்கேயுள்ள மொழியின் சொல் அதன் மொழிக்குரிய வடஎழுத்தை நீக்கி தமிழெழுத்துடன் சேர்ந்து சொல்லாகும் என்கிறார். தொல்காப்பியரும் வடசொல் என்கின்றாரே ஒழிய சமஸ்கிருதம் என்று கூறவில்லை.
Bilingual edict (greek and Aramaic) by King Ashoka - Afghan National Museum

புத்தரும் கூட தனது பௌத்தமத போதனைகளை சண்டசமொழி அறிந்தவர்களாலே பரவச்செய்தார். அவரும் சமஸ்கிருதத்தை எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. இதனால் புத்தரின் காலத்திலும் சம்ஸ்கிருதம் உருவாக்கப்படவில்லை என்பது பெறப்படுகின்றது. அசோகனின் கல்வெட்டில் கூட சமஸ்கிருத மொழி இல்லை. பௌத்த மதத்தின் போதனா மொழியாக வலம் வந்த சண்டசமொழி பின்னர் பிராமி, இலத்தீன், தேவநாகரி போன்ற மொழிகளின் எழுத்துக் குறிகளோடு சமஸ்கிருதமாக உருவெடுத்துள்ளது. தாய்மொழி தமிழ் தொடர்ந்து காண்போம்.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment