Thursday 31 May 2012

குறள் அமுது - (34)


குறள்:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங் கூறும் ஆக்கம் தரும்”                             - 183

பொருள்:
புறங்கூறிப் பொய்யாக நடித்து உயிர்வாழ்வதை விட சாவது அறங்கள் கூறுகின்ற நன்மையைத் தரும்.
விளக்கம்:
ஒருவர் இல்லாத இடத்து அவரை இகழ்ந்து கூறுதல் புறங்கூறுதலாகும்.நேர்மை இல்லாது போலியாக வாழ்தலே பொய்த்து உயிர்வாழ்தல். புறங்கூறுதல் என்பது ஆழ்ந்த கருத்தைத் தரும் சொல்லாகும்.  இது பொய்சொல்வதையோ பழிசொல்வதையோ குற்றங்குறை சொல்வதையோ நேரடியாகக் குறிக்கவில்லை. ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்தில் பேசுவதால்  சொல்லப்பட்ட விடயம் அவரைச் சென்றடையும் போது திரிபடையக்கூடும். அதனால் வரும் கேடு பலரை இன்னலடையச் செய்யலாம்.
புறங்கூறலை குறளை எனவும் கூறுவர். கொற்கைவேந்தன் எனும் அறநூல் ‘கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு’ எனச் சொல்லும். காற்றுடன் சேர்ந்த நெருப்பு எப்படி அழிவுகளை ஏற்புடுத்துமோ அப்படி புறங்கூறுவதால் பலருக்கும் அழிவுகள் ஏற்பட வழியுண்டு. 
ஒருவரைக் காணாத போது தூற்றியவர் கண்டபோது மிகக் குழைந்து புகழ்ந்து பேசுவதே நேர்மையற்று  பொய்யாக நடித்து உயிர் வாழும் செயலாகும். அப்படி நேர்மை கெட்டு பயனடைந்து வாழ்வதை விட சாவது எவ்வளவோ மேல். கண்டபோது ஒன்றும் காணாத போது வேறொன்றும் கூறுவது வஞ்சகச் செயலாகும். அறமில்லா நெஞ்சிலேயே வஞ்சகம் வளரும். அறமில்லாததைச் செயலைச் செய்வதைவிட வஞ்சகம் செய்வது கொடிய செயலாகும். எனவே அத்தகையோர் இறப்பதால் அறநெறி கூறும் நன்மைகள் வரும். 
ஒருவரின் பின்னால் புறங்கூறி, அவரின் முன் புகழ்ந்து பேசி பொய்யாக நடித்து பயன்பெற்று, கூனிக்குறுகி வாழ்வதைவிட வறுமையால் சாவது மேலாகும். ஏனெனில் அதனால் அறநூல்கள் சொல்கின்ற நன்மைகள் உண்டாகும். 

No comments:

Post a Comment