Monday 21 May 2012

குறள் அமுது - (33)



குறள்:
“செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்”                     - 412
பொருள்:
காதுக்கு உணவு கிடைக்காத போது வயிற்றுக்கும் கொஞ்சம் உணவு கொடுக்கலாம்.

விளக்கம்:
நாம் உண்ணும் உணவு வயிற்றைச் சென்றடைவதால் வயிற்றிற்கே உணவு கொடுக்கிறோம். ஆனால் வள்ளுவரோ இயற்கைக்கு மாறாக செவிக்கு உணவு கிடைக்காவிட்டால் வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுக்கப்படும் என்கிறார். 
செவி உண்ணுமா? வள்ளுவரே இன்னொரு குறளில் ‘செவிகைப்ப’ என்பார். செவிகைக்கும் சொற்களைக்கேட்டால் எமக்குக் கோபம் வரும். செவிக்கு உறைத்தால் எமக்கு அழுகை வரும். இனிமையாக இருந்தால் மகிழ்ச்சி அடைகிறோம். இப்போது சொல்லுங்கள் நாக்கு மட்டுமா சுவைக்கின்றது! செவியும் சுவைகின்றதல்லவா? 
இசையைக் கேட்டவாரோ, படம்பார்த்த படியோ, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டோ அன்றேல் ஆழ்ந்து படிக்கும் போதோ நாம் பசியை உணர்வதில்லை. காரணம் செவிப்புலனோடு நாம் ஒன்றும் போது மணத்தை மூக்கு முகரவும், சுவையை நா அறியவும் நேரம் எடுக்கும். விழி பார்ப்பினும் செவி கேட்பதையே நாம் உணர்வோம். 
செவி கேட்பது நின்றதும் வயிறு பசி பசி என பிட்சை கேட்கத் தொடங்கிவிடும். பிச்சை எடுப்பவர்க்கு யாரும் கொட்டியா கொடுப்பார்கள்? ஆதலால் ‘சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்றார். எனவே பிறந்ததன் பயன் உண்பதும் உறங்குவதும் என இருப்பது நல்லதல்ல. நல்லனவற்றை செவிமடுத்து எங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். 
செவிக்கு உணவாகின்ற கேள்விஞானம் கிடைக்காத போது உடல் உயிர்வாழ வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கலாம்.

No comments:

Post a Comment