Wednesday 30 May 2012

ஆசைக்கவிதைகள் - 33


முகம் துடைப்பது எக்காலம்?
அவன் பட்டப்படிப்பை முடித்து வேலை செய்கிறான். எனினும் அவனது எண்ணச் சிறையில் சிறையிருக்கும்  சிறுவயது தோழியை மறக்க முடியவில்லை. அவளைப் பார்க்க மாமனெல்லை வந்தான். அவளைக் கண்டான். அவளில் தான் எத்தனை மாற்றங்கள். பத்து வயது சிறுமியாக சிறகடித்துப் பறந்து திரிந்தவள் இன்று பருவமங்கையாக நிற்கிறாள். அதுவும் சீவிச் சிங்காரித்து சீலை கட்டி நிற்கிறாள். சீலை கட்டியவளைப் பார்த்ததும் 

ஆண்: புள்ளிப் புள்ளி சேலைக்காறி
                     புளியங்கொட்டை ரவுக்கைக் காறி
           அள்ளி அணைத்திடவே ஆவல்
                     கொண்டேன் பெண்மயிலே
எனப் பாடினான். 


அவனின் பாட்டைக் கேட்டவளின் முகம் கோபத்தால் சிவந்தது. அவளின் கோபத்தைக் கண்டதும் தனது தவறை உணர்ந்தான். அவளுக்கு அவன் யாரென்பது தெரியாது. அவர்களின் இளமைக் காலம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளுக்கு ஒரு ஐந்து வயதிருக்கும். பாடசாலைவிட்டு பிள்ளைகள் எல்லோரும் போய்விட்டார்கள். அன்று அவளின் தாய் அவளை அழைத்துப் போக வரவில்லை. அதனால் அவள் அழுது கொண்டு அங்கிருந்த அன்னமுன்னா (Annona squamosa) மரத்தின் கீழே நின்றாள். அப்படி அவள் அழுது கொண்டு நிற்பதைக் கண்ட பன்னிரண்டு வயதுச் சிறுவனான அவன், தனது லேஞ்சியால் அவளது கண்ணீரைத் துடைத்து அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவன் மாமனெல்லையைவிட்டுப் பல்கலைக்கழகம் போகும்வரையும் இருவரும் ஒன்றாகவே பாடசாலை சென்றுவந்தனர். காலவோட்டத்தால் அவள் அவனை அடையாளம் காணவில்லை. எனவே தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக 'கண்ணீர் துடைத்த' கதையைப் பாடுகிறான்.
ஆண்: அன்னவன்னா மரத்தின் கீழே 
                    அழுது கொண்டு நிற்கக் கண்டு
           மெழுகுதிரி லேஞ்சி கொண்டு
                    முகம் துடைப்பது எக்காலம்.
                                               -  நாட்டுப்பாடல் (மாமனெல்லை)
                                                 (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment