Tuesday 8 May 2012

பகுத்துண்டு வாழு!


காடுகள் வெட்டி கழனிகள் செய்தவன்
கழனியை மேவி கட்டிடம் கட்டினான்
நாடுகள் என்றும் நகரங்கள் என்றும்
நாத்தழும்பு ஏற நவின்றனன் மனிதன்.
காடுகள் இருந்த காலங்கள் தொடங்கி
கழனிகள் வந்த காலங்கள் தன்னிலும்
கூடுகள் கட்டி குலவிய பறவைகள்
நாடுகள் நகரங்கள் ஆகிய பின்னர்
கூடுகள் கட்ட கூரையை நாடி
குலவியே மகிழ்ந்தன குவலயம் எங்கும்.

சாடிடும் பகையின் தீரத்தைக் காட்ட
சணத்தினில் பொழிந்த குண்டுகள் அதனால்
நாடுகள் நகரங்கள் நொறுங்கின நன்றாய்
நானிலம் எங்கும் நர மாமிசம் 
காடுகள் போச்சு கழனிகள் போச்சு
கட்டாந் தரையாய் கல்லும் மண்ணும்
வீடுகள் இன்றி வீதிகள் இன்றி
வெளியெலாம் சிதறிக் கிடந்தன எங்கும்.

கூடுகள் இல்லாப் பறவைகள் கூடி
கூக்குரலிட்டு கூவின ஒன்றாய்!
காடுகள் வெட்டி வீடுகள் நாடுகள்
கட்டிடும் மானுடா! கருத்தினில் கொள்ளடா!
போடிடும் குண்டுகள் தன்னால் நிலம் 
பாழ்பட்டு நீரற்று பயனற்றுப் போவதை,
போட்டியை விட்டு பொறாமையை விட்டு
பகுத்துண்டு வாழு! நற் பண்போடு!
இனிதே,
தமிழரசி.                              

No comments:

Post a Comment