Saturday 21 April 2012

குறள் அமுது - (30)


குறள்:
“பண்என்னாம் பாடற்குஇயைபு இன்றேல் கண்என்னாம்
கண்னோட்டம் இல்லாத கண்”                                       - 573

பொருள்:
பாடுவதற்கு பொருந்திவராத பண்ணால் என்ன பயன் உண்டாகும்? அது போல இரக்கம் இல்லாத கண் என்ன பயனைக் கொடுக்கும்?
விளக்கம்:
ஒருவரைப் பார்த்து என்ன செய்கிறாய் எனக் கேட்பதற்குப் பதிலாக என்ன பண்ணுகிறாய் எனக்கேட்கும் வழக்கம் இன்றும் ஈழத்தமிழரிடம் இருக்கிறது. பண் என்ற சொல்லும் பண்ணிய (செய்த) என்ற கருத்தையே தருகின்றது. அதாவது பாடலுக்கு அமையப் பண்ணப்படுவதால் அதற்கு ‘பண்’ என்று பெயர் என பஞ்சமரபு என்ற இசைநூலின் ஆசிரியரான அறிவனார் சொல்கிறார்.
நான்மணிக்கடிகையும் 
“மண்ணி அறிப மணிநலம் பண்ணமைத்து 
ஏறியபின் அறிப பாநலம்”                          -(நான்மணிக்கடிகை: 3: 1-2)
என்கிறது. அதாவது மணிகளின் தரத்தை இது நல்ல வைரமா? மாணிக்கமா? எனப்பார்த்து அறிய அவற்றை கழுவி மெருகேற்றி அறிவது போல எழுதிய பாடலின் சுவையை பண்ணமைத்து பாடி அறிய வேண்டுமென கூறுகின்றது. 

கவிஞன் தன் மனநிலைக்கு ஏற்பவே பாடல் எழுதுவான். அப்பாடல் வெளிப்படுத்தும் சுவைக்கு  (நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை) ஏற்றவாறு பாடலின் பண் அமைய வேண்டும். பாடலின் தன்மைக்கு பொருந்தாத பண் பாட்டின் சிறப்பையே கெடுத்துவிடும்.
அதுபோல் கண் கணோட்டத்தைக் காட்ட வேண்டும். ஒருவரது மனநெகிழ்ச்சியைக் காட்டுவது அவரது கண்ணே. அதனால் மனநெகிழ்ச்சியை உள்ளக்கனிவை கண்ணோட்டம் என்று சொல்வர். ஒரு பாட்டிற்கு எப்படி பண்ணின் இசைபு முக்கியமோ அப்படி கண்ணோட்டம் கண்ணுக்கு முக்கியம் என்பதை எதிர்மறையாக இக்குறள் கூறுகின்றது. பாடலுக்கு இசைந்த பண்ணும் கண்ணுக்கு அமைந்த கண்ணோட்டமும் தேவை என்பது வள்ளுவரின் கருத்து.

No comments:

Post a Comment