Wednesday 25 April 2012

புற அழகு

மனித மனம் விசித்திரமானது. அது இயற்கையின் எந்த அழகையும் இரசிக்கின்றது. அதனால் அழகு என்னும் மாய மந்திரம் உலகில் உள்ள பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம் ஆண்கள். ஆண்கள் பெண்களின் அழகை இரசிப்பதால் அந்தக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு பெண்கள் அழகு நிலையங்களுக்குச் செல்கிறார்கள். அங்கு தமது நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள். 
உண்மையில் ஆண் பெண் என்ற பேதம் அற்று அழகைப் பேண எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். முகப்பருக்களைப் போக்குவது எப்படி? நரையை மறைப்பது எப்படி? தலமுடியைப் பாதுகாப்பது முதல் முகம், கை, கால் இவற்றில் வளரும் மயிர்களை நீக்குவது, நகங்களைப் பராமரிப்பது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கின்றது. 
அதற்காக கிழமைக்கு நான்கு ஐந்து என்று அழகு சாதனப் பொருட்களை வாங்கி வீட்டில் அடுக்குகிறோம். இரண்டு கிழமை பாவித்துவிட்டு அவை சரியில்லை என குப்பைக் கூடைக்குள் போடுகிறோம். அல்லது ‘என் சிநேகிதி சொன்னாள் இது சரியில்லையாம் அது நல்லதாம்’ என்றும் சில பொருட்கள் குப்பைக்கூடைகளை அடைகின்றன. இவற்றை நம்மவர்கள் செய்யாமல் இருப்பது நல்லது. 
இந்த உலகில் பிறப்பவர் எவருமே நான் இப்படி அழகாக இருக்க வேண்டும் எனக்கேட்டுப் பிறப்பதில்லை. அப்படிக் கேட்டுப் பிறந்திருப்பமேயானால் நாம் அழகை இரசிக்க மாட்டோம். யார் அழகை யார் இரசிப்பது? அழகு நிலையங்களும் உருவாகி இருக்காது. புற அழகு என்பது மிக முக்கியமானது தான். அதனாலேயே ‘இரக்கப் போனாலும் சிறக்கப் போ’ என்ற பழமொழி உருவாகியுள்ளது. பிச்சை எடுப்பதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்ற அழகுணர்ச்சி நம் முன்னோரிடம் இருந்திருக்கின்றது.
பிச்சை எடுப்பவரிடம் என்ன அழகு சாதனப் பொருட்கள் கொட்டியாகிடக்கப் போகின்றன? எனவே நம் முன்னோர்கள் எதிர்பார்த்த சிறப்பு என்ன? கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டி, குளித்து சுத்தமாக இருப்பதையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். அழகுணர்ச்சிக்காக இது போன்ற பல விடயங்களை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். 
மிகவும் அழகாக உடையுடுத்தி நளினமாக இருப்பவர்களைக் கண்டால் அவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்க நம் கண்கள் தாவும். அப்படி உடுப்பவரைப் பற்றி நல்லெண்ணம் தோன்றும். அவர்கள் கலை உணர்ச்சி உள்ளவர்கள் என்றோ, எதையும் நிதானமாகச் செய்பவர் என்றோ நாமே முடிவு செய்து கொள்கிறோம். இதே போல் ஏனோ தானோ என்று ஒரு பக்கம் தொங்க வரிந்து கட்டிக் கொண்டு சீலை உடுப்பவரைக் கண்டால் பொறுப்பற்றவ்அர் என்று எண்ணத் தோன்றும். இந்த எண்ணம் உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். எனவே சபைகளிலும் முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கும் முன் உங்களை நீங்களே ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். 'ஆள் பாதி ஆடை பாதி' என்பதை மறக்காதீர்கள்.   

No comments:

Post a Comment