Monday 23 April 2012

மிதிப்போமா சொல்லுமம்மா?

[இரு]பத்து ஆண்டுகளுக்கு முன் கடுங்குளிர் வாட்டிய பனி பெய்த ஓர் இரவு நேரம், இலண்டன் பாரதிய வித்தியபவன் மாணவரும் ஆசிரியரும் பெற்றோரும் தமது மேலாடைகள் (கோட்) பாதணிகளுக்காக இலண்டன் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகியிடம் மன்றாடி நின்றனர். ஏனெனில் அன்று இலண்டன் முத்துமாரியம்மன் கோயில் மேல் மண்டபத்தில் இலண்டன் பாரதிய வித்தியபவன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்காக குறித்த நேரத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் சென்றனர். ஆனால் அம்மண்டபத்தில் வேறுநிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதாவது பிற்பகல் நேரம் மண்டபத்தை வாடகைக்கு எடுத்தவர்களால் குறித்த நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்துக் கொடுக்க முடியவில்லை. 
பனியும் குளிருமாய் இருந்ததால் எல்லோரும் கோயிலுக்குள் சென்று முத்துமாரி அம்மனை வணங்கச் சென்றனர். அப்போது தமது மேலாடை, பாதணி யாவற்றையும் கோயிலுகுள் செல்லமுன் கழற்றி வைக்கும் இடத்தில் விட்டுச்சென்றனர். மற்றவர்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்ததும் யாவரும் கோயிலுக்கு உட்பக்கமாக மண்டபத்திற்கு போகும் வழியால் மண்டபத்திற்குச் சென்று கலை நிகழ்ச்சியைச் செய்தனர். நிகழ்ச்சியின் இடையே இரவு 21:30 மணி போல் இலண்டன் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகி பாதணிகளை எடுக்கும்படி சில பெற்றோரிடம் கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் நிகழ்ச்சி முடிவடையுமென்பதால் அவர்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் மேடைக்கு மறுபக்கம் இருந்ததால் அவர்களுக்கு அது தெரியாது. 
இரவு 22:00 மணிக்கு முன் கலை நிகழ்ச்சி முடிந்து அவர்கள் தமது உடைமைகளை எடுக்கச் சென்றால் 21:30 மணிக்கு கோயில் பூட்டுவது வழக்கம் என்றும் மறுநாள் வந்து உடைமைகளை எடுத்துச் செல்லுமாறும் கோயில் நிர்வாகி கூறினார். எவ்வளவோ நேரம் கெஞ்சிப்பார்த்தும் அவர் அசையவில்லை. பச்சிளம் குழந்தை முதற்கொண்டு முதியோர்வரை யாவருமே பாதணியும் மேலாடையுமின்றி இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. நடனம் ஆடிய பிள்ளைகளுக்கு காலுறைகூட இருக்கவில்லை. வெறுங்காலுடன் வெண்பனியில் நடந்தனர்.

அப்பொழுது  முத்துமாரி அம்மனுக்கு விண்ணப்பம் எழுதி ‘கலசம்’ இதழுக்குக் கொடுத்தேன். அச்சகம் வரை சென்ற அவ்விண்ணப்பம் அச்சாகவில்லை. அப்போது நானும் கலசம் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தேன். அதன் பின்னர் கலசத்திற்கு எழுதுவதைச் சுருக்கிக் கொண்டேன்.]
இலண்டன் டூட்டிங் முத்துமாரி அம்மனுக்கு ஒரு விண்ணப்பம்.
முத்துமாரி அம்மனுக்கு முற்பகலில் தீ மிதித்தால்
இத்தரையின் இன்னலெல்லாம் இக்கணமே போகுமென்பார்
மிக்ககுளிர் இராவினிலே மேலாடை தானுமின்றி
பத்தினியே உன்வாசலிலெம் பாதணிக்குப் பரிதவித்து
பச்சிளம் பாலகர்நாம் பனிமிதித்து வந்தோமே!
கற்சிலை நீயலையானால் காட்டிடுவாய் உன்மகிமை
நித்தமுமே அவன்நிழலில் நிற்பாயெனும் மமதையினால்
சித்தமது இரங்காதெம் செருப்புகளைத் தாராதே
வக்கணையாய் கதைகதைத்து வாசற்கதவை பூட்டிவைத்த
மதியாதான் கோயில்வாசல் மிதிப்போமா சொல்லுமம்மா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment