Thursday 19 April 2012

பக்திச்சிமிழ் - 23

தீராநோய் தீர்த்தருள வல்லான்
- சாலினி -
மனித ஆற்றலுக்கு அப்பால் உலகை இயக்கும் சக்தியை இறைவன் என நாம் அழைக்கிறோம்.  அந்த சக்தியை போற்றினால் - தொழுதால் அது எம்மைக் காக்கும் என நம்புகிறோம். அதனாலேயே எம்மால் தீர்க்கமுடியாத துன்பம் எம்மை அணுகும் போதெல்லாம் இறைவனிடம் முறையிடுகின்றோம். தீராத நோயை தீர்த்தருள் என முறையிடுவோரே உலகில் அநேகர்.  உலகைக் காக்கும் சக்தி எம்மைக் கைவிடாது என்னும் திடநம்பிக்கை எம்மிடம் இருப்பதாலேயே அப்படி முறையிடுகிறோம். தீராத நோயைத் தீர்த்தருள் என முறையிட்டு, இறைவனிடம் கையேந்தி நின்றோர் மருந்து ஏதுமின்றி நோய் நீங்கி, சுகமாக வாழ்வதைக் கண்டனர். அதனால் இறைவனை நோய் தீர்க்கும்  வைத்தியன் எனப்போற்றத் தொடங்கினர். இறைவனுக்கு வைத்தியநாதன், வைத்தீஸ்வரன் எனப்பல பெயர்களைச் சூட்டினர். 
திருநாவுக்கரசு நாயனார் வரலாறு இறைவனை வைத்தியனாகாக் கோடிட்டுக் காட்டுகின்றது. சமண மதத்தின் தலைசிறந்த போதகராக, தருமசேனர் என்ற பெயருடன் வாழ்ந்த திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயத்தவராகவும், சிவனடியாராகவும் மாறக் காரணம் என்ன? அவருக்கு வந்த சூலை நோய் சிவனருளால் மாறியதால் அல்லவா அவர் மீண்டும் சைவனாக மாறினார். அவர் சூலை நோயின் வயிற்று வலியால் துடி துடித்ததை முதலாவது திருப்பதிகத்தில் 'ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறை அம்மானே' என்றும் 'சூலை தவிர்த்தருளீர்' என்றும் கூறியுள்ளார். அதன் முதலாவது தேவாரமான ‘கூற்றாயினவாறு’ எனும் தேவாரத்தில் ‘வயிற்றின் உள்ளே குடலோடு தொடங்கி முடக்கி குத்தியெடுப்பதை (இடத்தல் - இட)
“தோற்றாது என் வயிற்றின் அகம்படியே 
          குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
          வீரட்டானத் துறை அம்மானே”                       - (ப.திருமுறை: 4: 1: 1)
எனக் கூக்குரலிட்டு சொல்லியுள்ளார்.
அப்படி சூலை நோயால் துடித்த திருநாவுக்கரசு நாயனாரின் சூலை நோயை நீக்கிய சிவனை 
“பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்”                    - (ப.திருமுறை: 4: 58: 8)
என எமக்குக் காட்டித் தந்துள்ளார்.
பிணிதீர்க்கும் அந்த வைத்தியநாதன் எங்கே இருக்கின்றான்? தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோயில் என்றதுமே திருப்புள்ளிருக்குவேளூர் கோயிலே எல்லோருக்கும் ஞாபகம் வரும். அந்தக் கோயிலில் இருக்கும் இறைவன் பெயர் ஶ்ரீவைத்தியநாத சுவாமி. அதனால் அக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஶ்ரீவைத்தியநாதன் தீராத நோய்களை தீர்ப்பான் என்பதையும் அப்படிபட்ட இறைவனை தான் புறக்கணித்து வாழ்நாளை வீணாக்கியதை
“பேராயிரம் பரவி வானோரேத்தும்
          பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
          மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
          திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
          போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே”                - (ப.திருமுறை: 6: 54: 8)
எனப்பாடி திருநாவுக்கரசு நாயனார் வருந்தியுள்ளார்.

No comments:

Post a Comment