Sunday 22 April 2012

மரநடுகை



உலக உயிர்களின் வாழ்விற்கு வேண்டிய உயிர்க்ககாற்று முதற்கொண்டு உணவையும்  தருபவை தாவரங்களே.   ஆதலால் அவை மனிதவாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரம், செடி, கொடிகளின் தேவையை உணர்ந்த ஆதிமனிதன் அவற்றைப் பேணிக்காத்தான். அவை வெய்யிலாலும், வெள்ளத்தாலும் அழிவதைக் கண்டு அவற்றைப் பயிரிட்டு நட்டு வளர்த்தான். மனித நாகரிக வளர்ச்சியின் உச்சியில் வைத்து புகழ்ந்து கூறப்பட வேண்டிய விடயம் மரநடுகையே ஆகும். மரத்தை நட்டு வளர்க்கலாம் என்பதை மனிதன் அறிந்திராவிட்டால் இன்றும் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்திருப்பான். மனிதன் விலங்குகள் போல் திரிந்த காலத்தில் பெண்கள் தமது குழந்தைகளுக்காக ஓரிடத்தில் தங்கி வாழவேண்டியவர்களாக இருந்தார்ககள். அதனால் தமக்கு வேண்டிய உணவைத் தரும் தாவரங்களை அவர்களே நட்டு வளர்த்தார்கள்.

ஆதலால் ஆதி மனிதரின் வாழ்வில், பயிர்களை நட்டு விவசாயம் செய்தவர்கள் பெண்களே  என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவாகும். மனிதவாழ்வைச் சீரமைத்த மரநடுகையை நாட்டுப்புறப் பாடல்களும் எடுத்துடுச் சொல்கின்றன. வாழை, தென்னை போன்றவற்றையும் நட்டு பெண்கள் வளர்த்ததை ஈழத்து நாட்டுப் பாடல் ஒன்று சொல்கின்றது.
பெண்: வாழை வச்சேன் தென்னை வச்சேன்
                       வாழைக்குள்ளே தேனை வச்சேன்
             தேனெடுத்துத் தின்னமுன்னம் 
                       சின்னமச்சான் கையவச்சான்.
வன்னிமக்கள் வாழைத் தண்டைச் சுற்றியிருக்கும் பச்சை வாழைமடலின் உள்ளே மல்லிகைப்பூ, தாழம்பூ, தாமரை மொட்டு, முருங்கக்காய், பாகற்காய், வெற்றிலை போன்றவற்றை பல நாட்கள் வைத்து எடுத்து பயன்படுத்துவர். ஏனெனில் வாழை குளுமையாக இருப்பதால் வாழைமடலினுள் இருக்கும் பொருட்கள் வாடாது இருக்கும். அதுபோல் சூரிய வெப்பத்தால் புளித்துப் போகாது இருக்க தேன், தயிர், பனம்பாணி, பாலைப்பாணி போன்றவற்றியும் மருந்துப் பொருட்களையும் வாழைமடலுள் வைத்து பாதுகாப்பது அந்நாளைய வழக்காகும். அந்த வழக்ககத்தை இந்த நாட்டுப்பாடலில் உள்ள "வாழைக்குள்ளே தேனை வச்சேன்" என்ற வரி வரலாற்றுப் பதிவாக எமக்கு எடுத்துக் காட்டுகிறது.




பெண்: தாழ்வுக் கிடங்கு வெட்டி 
                      தலைமுறைக்கு கட்டை நட்டு
            சன்னியாசி வச்சமரம் 
                      சரியான ஆலமரம்.
                                          -  நாட்டுப்பாடல் (பாலியாறு)
                                -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
இரண்டாவது நாட்டுப்பாடல் ஆண்கள் ஆலமரம் நட்டு வளர்த்ததைக் காட்டுவதோடு அதனைத் தமது சந்ததியினருக்காக[தலைமுறைக்கு] நட்டனர் என்பதை எடுத்துச் சொல்லி எம்மையும் சிந்திக்க வைக்கின்றது. இந்த இரு நாட்டுப்பாடல்களிலும் சிலேடை இழையோடுவதையும் காணலாம். 

பாலியாற்றுப் பக்கம் 1962 - 1967 களில் ஆலமர விழுதுகளில் நான் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திருக்கிறேன். அந்த ஆலமரங்கள் இப்போ எங்கே தொலைந்தன. அவற்றை ஈடு செய்ய எவராவது ஆலமரங்கள் நடுவதுண்டா? ஊர்கள் தோறும் குறைந்தது இரண்டு ஆலமரங்கள் நின்றல் அவை மண்ணுக்கு நிழலைக் கொடுத்து ஊரில் வாழ்வோருக்கு நல்ல காற்றை சுவாசிக்கத் தரும். மற்றைய உயிரினங்களும் மகிழ்ந்து வாழும்.
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. சிலேடையையும் விளக்கியிருக்கலாம்.

    நல்ல பதிவு.

    ReplyDelete