Friday 27 April 2012

பகுத்துண்டு வாழ்தலை தடுப்பது எது?


இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எம் தமிழ் மூதாதையர் வெளிநாடுகளுக்கு உணவை கப்பல்களில் அனுப்பினர். ஆனால் இன்று எமது வருங்கால பாலகர் நிலை எப்படி இருக்கிறது பார்ப்போமா? உங்களில் பலருக்கு ஆபுத்திரன் கதை நன்றாகத் தெரிந்திருக்கும். ஆ என்றால் பசு. பசு ஒன்று தாயில்லாக் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்த கதை அது. ஆனால் இன்று தாய்யற்ற பிள்ளைக்கு நாய் பால் கொடுக்கின்றது. பால் கொடுத்து வளர்ப்பார் இல்லா நிலையில் பசியின் கொடுமையில் அந்தப் பச்சிளம்பிள்ளை நாயில் பால்குடிக்கிறான். அந்த நாயாய் இருக்கும் நிலை கூட எனக்குக் கிடைக்கவில்லையே. அந்த நாயாம் தாயைப் பார்த்து நாணித் தலை வணங்குகிறேன். மானுடப் பிறவி எடுத்ததற்குகே நாணுகிறேன். தாயிடம் பால் குடிக்க வேண்டியவன் நாயிடம் குடிப்பதா? மானுடரா நாம்? அந்தப்பிள்ளை வளர்ந்து தன்னை என்ன என்று சொல்வான்? மானுடரை மதிப்பானா? மிதிப்பானா? அவனின் அருகில் எத்தனை கால்கள்?
ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கு உள்ள ஈவு இரக்கம் கூட மனிதராகிய எம்மிடம் இல்லையே. ஆறறிவு படைத்தோம். ஆற்றல் உள்ளோம். வானை அளந்தோம். கடல் மீனை அளந்தோம். விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் கண்டோம். ஆனால் போட்டியும் பொறாமையும் வஞ்சனையும் சூழ்ச்சியும் மூடநம்பிக்கையும் கொண்ட மனித மனங்களை வெல்ல வழிகாணமுடியவில்லையே. மனித மனங்களை வெல்ல மனிதன் என்று கற்கின்றானோ அன்றே மானுடன் எனும் தகுதியை அவன் அடையமுடியும். அதுவரை மனிதன் விலங்கைவிட கொடூரமானவனே. ஆதலால் நானும் கொடியவளே என நினைக்க நெஞ்சம் சுடுகின்றதே.
இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும் உயிர் வாழ்வதற்காக போராடியே வாழ்கின்றன. ஆதலால் வாழ்க்கைப் போராட்டம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல உயிர்கள் யாவற்றிற்கும் பொதுவானது. அது உலக இயற்கை தனக்குத் தானே வரைந்து கொண்ட ஏட்டில் எழுதாத சட்டமாகும்.  அதனை இந்த உலகம் நன்கு அறியும்.  எனினும் இவ்வுலகம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நிலை அறியாது தடுமாறிச் சீரழிந்து போகின்றது. 

அதுவே அரசியல் சாணக்கியம் எனக்கூறி பேரினவாத அடக்குமுறையால் உலகில் மிக உன்னத நிலையில் இருந்த எத்தனையோ மனித இனங்களை அழித்து ஒழித்து குழிதோண்டிப் புதைத்துவிட்டது. குறுகிய நிலப்பரப்பில் முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு குழி தோண்டிய பேரினவாதத்திற்கு, உலகமே கைகொடுத்து உதவியதே! அது ஏன்? அதன் விடையை அறியாதா! இவ்வுலகம் இருக்கிறது?  ஈழத்தமிழரின் வளர்ச்சி, இன்றைய உலகத்தை பயங்கொள்ள வைத்ததையே முள்ளிவாய்க்கால் அவலம் வருங்கால உலகிற்கு வரலாறாகச் சொல்லப் போகின்றது. அந்த உண்மை முள்ளி வாய்க்கால் அவலத்திற்கு துணை போன சில நாடுகளை இருதலைக் கொள்ளி எறுப்பாக அலைய வைக்கிறது.
தமிழ் இனத்தின் வரலாறு பல்லாயிர வருடப் பழமையானது. அந்த பழமையின் அநுபவத்தால் தமிழர் தனக்கென வாழாது பிறர்க்கெனெ வாழும் உயர்ந்த கொள்கை உடையோராய் வாழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன. இன்னொரு விதமாகச் சொல்வதானால் உழைப்போர் இல்லாதவர்க்கு அள்ளிக் கொடுத்தனர். தான் உழைத்து சேர்த்த பொருட்கள் தன் பிள்ளைகளுக்கே என்ற குறுகிய வட்டத்துள் வாழாது பகுந்து உண்டு வாழ்ந்தனர். அதனை திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில் சொல்லும் 
 “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
எனும் திருக்குறள் மிகத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது. கொல்லாமை என்றால் எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாது இருத்தலாகும். 
விலங்குகள் தமது பசியைப் போக்க பசி எடுத்தால் மட்டுமே கொலை செய்யும்.  ஆனால் மனிதனோ பசிக்கொடுமையைப் போக்க உயிர்களைக் கொலை செய்தல், கொள்ளை இடுவதற்காக கொலை செய்தல். பொறாமையாலும் தனிப்பட்ட பகைமையாலும் கொல்லுதல். கொல்வதால் அடையும் இன்பத்துக்காகக் கொல்லுதல், போர் செய்து கொல்லுதல் என பலவகையாக கொலைத்தொழில் புரிகின்றான். போரையும் எதற்காகச் செய்கின்றான்? மற்றைய நாட்டின் வளங்களைச் சூரையாடவும், தத்தமது மதங்களே சிறந்தது எனக்கூறி அவற்றை மனிதர் மேல் திணிக்கவும், தாமே உயர்ந்தோர் எனக் காட்டவும் இனத்தோடு இனம், மதத்தோடு மதம், நாட்டோடு நாடு போரிடுகின்றான். இதனால் மனிதன் கணும் இன்பந்தான் என்ன? இப்போர்களும் மனித இனங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து  பகுத்துண்டு பகுத்துண்டு வாழ்தலைத் தடுக்கின்றன.
போர்களால் கொலைகள் நடக்காமல் இருக்க வேண்டுமேயானால் மனிதர் தம்மிடம் இருக்கும்  உணவைப் பிரித்துக் கொடுத்து, தாமும் உண்டு பல உயிர்களைக் பாதுகாத்து வாழ வேண்டும். ஏனெனில் பண்டைய அறிஞர்கள் ஒவ்வொரு நூலாக ஆராய்ந்து, எடுத்துத் தொகுத்துத்தந்த அறங்களில் தலைசிறந்ததாக 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்தலையே'  சொல்லாம் என்கிறார் வள்ளுவர். உலகில்  இயற்கையாகக் கொட்டிக் கிடக்கும் வளம், பகிர்ந்து கொடுத்து மற்றைய உயிர்களையும் பாதுகாத்து வாழ போதுமானது என்பது பழந்தமிழர் கண்ட முடிவாகும். ஆதலால் முதியோரையும் நோயுற்றோரையும் பேணிக்காக்கும் பொறுப்பு நாட்டில் வாழும் எல்லோரிடமுமே இருந்தது. பழந்தமிழர் விலங்குகளையும் பாதுகாத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள கொட்டடி, யானைகோட்டை போன்ற இடப்பெயர்கள் விலங்குகளை பேணியதைச் சொல்கின்றன. அறிவும் ஆற்றலும் பிறருக்காக வாழும் பண்பும் தமிழர் விரும்பும் சொத்துக்களாகின. தாம் பிறந்த குடிக்காக, ஊருக்காக, நாட்டிற்காக வாழ்வோரை போற்றிப் புகழ்ந்தனர்.
சிறந்த நாடு என்பது பெரும் பொருள் வளத்தால்  பிறதேசத்தவராலும் விரும்பத்தக்கதாய், அழிவுகள் இன்றி  நன்கு பயிர்விளைவதாக இருக்கும் என திருவள்ளுவர் நாடு எனும் அதிகாரத்தில் கூறி இருக்கிறார். பண்டைய தமிழரிடம் இருந்த வளமும், தொழில் நுட்பமும், செல்வச் செழிப்பும், பகுத்து உண்டு எல்லா உயிர்களையும் காக்கும் பண்பும் பல மனித இனக்குழுக்களை தமிழ்த்தேசத்தை நோக்கி வரவைத்தது. தமிழரின் முக்கிய செல்வமாக மாடுகளும், நீர்நிலைகளும், வயல்களும் மரங்களும் இருந்தன. இவற்றுள்ளும் மாடுகளே பெரும் செல்வமாகக் கருதப்பட்டதால் தமிழில் மாடு என்ற சொல்லுக்கு  செல்வம் எனும் கருத்தும் உண்டு. எனவே தாம் பிறந்த இடத்தின் செல்வமான மாடுகளை களவாகப் பிடித்துச் சென்றோரையும், நீர்நிலைகளை தகர்த்தோரையும் வயல்களையும் மரங்களையும் அழித்தோரையும் எதிர்த்துக் களமாடினர். அப்படி போர் புரிந்து மரணம் அடைவதை பெரும் பேறாகக் கருதினர். இருக்கு வேதகாலத்திலேயே அத்தகைய போரை தமிழர் செய்யத் தொடங்கி விட்டனர் என்பதற்கு இருக்கு வேதமே சாட்சி.                                                                                               
                                                              இரணைமடு - கிளிநொச்சி  
இருக்கு வேதம் தமிழரை தாசர்கள் எனச்சொல்லும். தமிழர்கள் பலவகை நீர்த் தேக்கங்களை கட்டி வைத்திருந்தது பற்றி இருக்கு வேதம் சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம். “மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பது போல தாசர்கள் தண்ணீரை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! கட்டுத் தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவது போல அவர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை அவிழ்த்து விடு” என இந்திரனிடம் ஆரியர் வேண்டியதை இருக்குவேதம் சொல்கிறது. 

கட்டுத்தறியில் கடப்பட்ட மாடு.

வடவரின் வேள்விக்குத் தேவையான மாடுகளை தமிழரின் கட்டுத்தறியில் இருந்து அவிழ்த்து விட்டவன் இந்திரன் என்பதையும், அவனிடம் தமிழரின் நீர்நிலைகளையும் தகர்த்து விடும்படி வடவர் கேட்டதைச் சொல்லும் இருக்கு வேதம் இந்திரனை தமிழனாகவும் சொல்கிறது. ஆதலால் இந்திரன் முதற்கொண்டு இன்றுவரை தமிழ்க்குடியை வேரறுக்க நம் குடியில் பிறந்த பல கோடாரிக்காம்புகள் உதவிக் கொண்டேயிருக்கின்றன.  இந்திரனின் படை தமிழரின் நீர்த் தேக்கங்களைப் பாதுகாத்த ‘அகி‘ எனும் தலைவனைக் கொன்றது. நீர் நிலைகளை உடைத்தது. அந்தவெள்ளத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். வயல்கள் அழிந்தொழிந்தன. தமிழர் நிலங்கள் வடவர் வசமாயின. அதனாலேயே சங்ககால தமிழ் அரசர் பலமுறை இமயம் வரை சென்று வடவரை வென்று அடக்கி இமயத்தில் தமது முத்திரையை பொறித்து வந்தனர் போலும். 

ஓரினம் நன்கு வாழ்தலைக் பார்த்து மகிழமுடியாத காழ்ப்புணர்ச்சி பொறாமையை உண்டாக்கிறது. அதனால் உலகவுயிர்களை வாழ்விக்கும் உணவையும் நீரையும் போர் என்ற போர்வையில் அழித்து ஒழித்து மகிழ்கின்றனர். பகுத்துண்டு வாழ்தல் என்னும் மனிதப் பண்பை சிதைத்தது போர்களே எனின் மிகையாகாது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment