Friday 13 April 2012

தனி உலக்கை போடலாமா?



பொலநறுவையில் வாழ்ந்த அழகான இளமங்கை ஒருத்தி தனியாக நின்று உரலில் மா இடித்தாள். தனியாக இடித்ததால் அவளின் முகத்திலிருந்து வியர்வை சிந்தியது. உலக்கையை மேலும் கீழுமாகத் தூக்கியதால் அவளது மார்பும் குலுங்கியது. அருகே யாரும் இல்லாது அவள் தனியே நின்று இடிப்பதை ஒரு வாலிபன் பார்த்தான். அழகி ஒருத்தி வியர்வை சிந்த, மார்பு குலுங்க தனியே உலக்கையால் இடிப்பதைக் கண்ட துடுக்கான வாலிபன் சும்மா போவானா?  எனவே அவளைப்பார்த்து         
ஆண்:  முத்தான முத்துருள
                     முகத்திலுள்ள வேர்வை சிந்த
           தங்கப்பொன் மார்குலுங்க
                     தனி உலக்கை போடலாமா? 
எனப் பாடினான். 

அவளுக்கு வந்ததே கோபம். மா இடித்த உலக்கையை திருப்பிப் பிடித்தாள்.  தனி உலக்கை ஆனாலும் பூண் உலக்கை பாரடா! பெண் என்ற எண்ணமா? என அந்த வாலிபனை அடிக்கப் போனாள். அவளின் கோபமும் நாட்டுப் பாடலாக எழுந்தது.
பெண்:  தனி உலக்கை ஆனாலும்
                      பூண் உலக்கை பாரடா!
            ஏழையென்ற எண்ணமோ
                      எட்டி நடை போடெடா!
                                                -  (நாட்டுப்பாடல் (பொலனறுவை)
                                                - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இளம் பருவ வயதின் சீண்டலையும் சீறலையும் இந்த நாட்டுப்பாடல் இரண்டும் எடுத்துச் சொல்கின்றன. 

சங்ககாலத்தில் ஓர் ஊரிலிருந்த சிற்றிளம் பெண்கள் காஞ்சிமர நிழலில் தமது வளத்தை பாடியபடி மீன் முட்டை போன்ற வெண்மணலைக் குவித்து வெள்ளியாலான சிறிய பூண் போட்ட கரும்பு உலக்கை கொண்டு இடை ஒடிய  ஒடிய இடித்ததை அகநானூறு காட்டுகிறது.
"வெள்ளி விழுத்தொடி மென்கரும்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க
மீன்சினையன்ன வெண்மணல் குவைஇக்
காஞ்சி நீழல் தமர்வளம் பாடி
ஊர்க்குறு மகளிர்"                                            - (அகம்: 286 : 1 - 5)

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment