Tuesday 17 April 2012

நெஞ்சக் கனல் - 1

இந்த நூற்றாண்டில் வாழும் தமிழர் நெஞ்சம் எரிமலையாய் வெடித்துச் சிதறி ஆண்டுகள் மூன்று முடிவடைகின்றது. [தற்போது பன்னிரெண்டு ஆண்டுகள் கரைந்து விட்டன] எனினும் அந்த எரிமலையின் அனற்குழம்பு எல்லோர் நெஞ்சங்களிலும் இன்னும் தகித்து ஓடிக்கொண்டே இருக்கின்றது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் இதயம் துடிக்க கண்கள் பனிக்க ஈழத்தை நினைத்துப் பார்க்கிறோம். இன்று ஈழத்து மண்ணில் தமிழர் உணவுக்காக ஏங்கி, வயிற்றுப்பசியோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள். பன்னெடுங் காலமாக தமிழனின் குருதியோடு கலந்த மண்ணில் வாழ்வோ சாவோ எது என்றாலும் தன்மானம் பெரிதென வாழ்ந்த தமிழ்க்குடி இன்று கருவறுக்கப்படுகின்றது. நாம் எப்படி வாழ்ந்தோம்?  
கொஞ்சம் திரும்பிப் பார்போமா? கடல் பொங்கி எழுந்து பல நாடுகளை தன் வயிற்றினுள் விழுங்கிய மாபெரும் கடல்கோள் கி மு 1250ல் நடந்ததாக The Anchor Bible Dictionary கூறுகின்றது. அது கூறும் கடல்கோள் நடந்து மூவாயிரத்து இருநூற்று ஐப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தக்  கடல் கோளையே சங்ககாலப் புலவர்கள் எடுத்துச் சொல்கிறார்கள் எனக்கொள்ளலாம். சேர இளவரசனாக  இருந்த இளங்கோஅடிகளும் கூட
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி”           - (சிலம்பு:)
என சிலப்பதிகாரத்தில் கடல் கோள் நடந்ததைக் கூறி, கடல்கோளால் நாடு அழிந்ததால் நாட்டு மக்களைக் காப்பாற்ற  பாண்டிய அரசன் இந்தியாவின் வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான் என பாண்டியனின் வீரத்தை புகழ்கிறார். 


அவன் பஃறுளி ஆற்றுக்கும் தெற்கே இருந்தே ஆண்டான். அந்தக் காலத்தில் அப்பாண்டியனின் நாட்டின் தெற்குப் பகுதியின் வடக்கு எல்லையாக பஃறுளி ஆறு இருந்ததை  சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் ‘அக்காலத்து அவர் நாட்டு தென்பாலி முகத்துக்கு வட எல்லையாகிய பஃறுளி எனும் ஆற்றுக்கும்’ என தனது உரையில் எழுதியுள்ளார். எனவே இளங்கோஅடிகள் கூறிய தென்னவனாகிய பாண்டியன் தற்போதைய தமிழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பது உறுதியாகின்றது. அத்துடன் வட எல்லையாகிய பஃறுளி எனச்சுட்டுவதால் அவ்வாற்றுக்கும் தெற்கேயும் நிலம் இருந்தது என்பதும் உறுதியாகின்றது. அப்படி ஒரு நிலம் இருந்து அதில் ஓடிய ஆற்றின் ஆற்றிடைக்குறையே இலங்கை என்பதை இலங்கை என்ற பெயரே சொல்கிறது. ஆதலால் தமிழரின் தாயகம் ஈழமே. 
இலங்கையின் பல பெயர்களில் சேரன் தீவு என்பதும் ஒன்று. அப்பெயர் முற்காலச் சேரர்கள் இலங்கையில் இருந்து அரசாண்டதை எடுத்துச் சொல்கின்றது. சங்கப் பாடல்களும் சேரர்களின் நாடாக இலங்கையைக் காட்டுகின்றன. சேர அரசனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஈழத்திலிருந்து அரசாண்டதையும் அவனின் போர்த்திறமையையும் பதிற்றுப்பத்தில் குமட்டூர்க் கண்ணனார்  “ உமது அரசன் யாரென்று கேட்பீராயின் கடல் நடுவே இருக்கும் தீவிலிருந்து பகைவரது இடத்துக்குச் சென்று வெற்றி கொண்டு அவரது காவல்மரமாகிய கடம்பு மரத்தை வெட்டி அழிக்கும் நெடுஞ்சேரலாதன் என்கிறார். அதை பதிற்றுப்பத்து
 “ நுஞ்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச் சென்று 
 கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன்”                        - (பதிற்றுப்பத்து:2: 20: 1- 5)
எனச்சொல்கிறது.   

துருத்தி என்றால் ஆற்றிடைக்குறை. ஆற்றிடைக்குறைக்கு இன்னொரு பெயர் இலங்கை. துருத்தி, இலங்கை ஆகிய இரண்டும் ஆற்றுக்கு இடைப்பட்ட நிலத்தையே குறிக்கும். ஆனால் இப்பாடலில் முந்நீர் துருத்தி என கடலினுள் இருக்கும் இலங்கையைச் சொல்கிறார். ஆற்றுநீர், ஊற்றுநீர், உப்புநீர் ஆகிய மூன்றும் சேர்ந்தது கடல்நீர் ஆதலால் அது முந்நீர் எனப்படும். நெடுஞ்சேரலாதன் கடல்கோளின் பின்னர் இலங்கையில் இருந்து ஆண்ட அரசன் என்பதையே இப்பாடலின் வரிகள் சுட்டுகின்றன.
வடநாட்டு அரசர்கள் தென்நாட்டு அரசர்களோடு எந்நாளும் மோதிக்கொண்டே இருந்தார்கள் அதனால்சினம் அடைந்த நெடுஞ்சேரலாதன் கப்பல் படையோடு ஈழத்தின் மாந்தையில் இருந்து சென்று வடநாட்டு அரசர்களை வென்று அவர்களை அடக்கினான். இமயமலையில் வில் அடையாளத்தைப் பொறித்தான். வட அரசர் பணிந்து திறையாகக் கொடுத்த பொருட்களை கப்பலில் ஏற்றி மாந்தைக்கு கொண்டு வந்தான். அப்பொருட்களில் இருந்து ஆம்பல் பெறுமதியான அதாவது நூறு திரிலியன் செல்வத்தை மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் அழிந்து போகுமாறு கைவிட்டான் என்பதை மாமூலர்
“வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் 
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்  செய்பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவை இ அன்றவன் 
நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”             
                                                        -- (அகம்: 127: 3-10)
என அகநானூற்றில் கூறியுள்ளார்.

மாமூலனார் ‘நன்னகர் மாந்தை’ எனத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்ட போதும் இலக்கிய ஆய்வாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ஏனோ ஈழத்தின் மாந்தையைக் கண்டு கொள்வதில்லை. மாந்தையை மரந்தை என எழுதுகின்றனர். சங்ககால அரசர்கள் ஈழத்தில் இருந்து தமிழகத்தை ஆண்டார்கள் எனச்சொல்வது அவர்களுக்கு இழுக்காக இருந்திருக்கலாம். அல்லது ஈழத்தையும் தமிழகத்தையும் ஒரே நாடாகச் சேர்த்துப் பார்க்க அவர்கள் தவறி இருக்கலாம். எப்படி இருப்பினும் இன்று இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் இன அழிப்புக்கு அவர்களின் வரலாற்று உதாசீனம் ஒரு முக்கிய காரணமாகும்.
ஈழத்தில் வாழ்ந்த சங்ககாலத் தமிழர் டைட்டானிக் படத்தில் நீங்கள் பார்த்த கப்பலைவிட பெரிய கப்பல்களைக் கட்டினர். அக்கப்பல் உலகமே சேர்ந்து எழுந்து செல்வது போல் இருந்ததாம். அதனை ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்”      - (அகம்: 255: 1)
எனச் சங்கப்பாடல் சொல்கிறது. 
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்கு முன் எம் மாவீரர்களால் கட்டப்பட்டு குறையோடு நிற்கும் நீர் மூழ்கிக் கப்பலை, இலங்கை இராணுவம் பார்த்து ஆச்சரியப்பட்டு படம்பிடித்து வலைத்தளங்களில் போடுகிறது. தெற்கே இருந்து வந்து, அந்த நீர்மூழ்கியை பார்க்கும் மக்களிடம் அரசாங்கம் காசு வாங்குகிறது. ஏனெனில் அதுவும் உலகு கிளர்ந்தன்ன நிற்கும் நீர்மூழ்கி. 
சங்ககாலத் தமிழர் ஈழத்தில் விளைந்த உணவை கப்பல்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதை பட்டினப்பாலையில் கடியலூர் உத்தரங் கண்ணனார்
“ஈழத்து உணவும் காளகத்து ஆக்கமும்”       - (பட்டினப்பாலை: 191)
எனச்சொல்வதால் அறியலாம். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே ஈழத்து உணவை வெளிநாட்டிற்கு அனுப்பிய ஈழத்தவர்கள் நாம். ஆனால் இன்று உணவுக்கு கையேந்தும் நிலையில் நிற்கிறோம். நெஞ்சக்கனல் வீசாதிருக்குமா?
இனிதே, 
தமிழரசி. 

2 comments:

  1. Tamil is worlds first language Tamilan are first human beings in the globe. ஈழம.. is one of the Tamil Firka . The origin of Tamil is Indus valley.

    ReplyDelete
    Replies
    1. Tamil reached the Indus valley by ship through Arabian sea from Kumari kandam some 10 thousand yes back

      Delete