Thursday 2 October 2014

மனிதர் அநுபவிக்கும் சுவைகள்

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


“நீயார்! எல்லாவற்றையும் இயக்கிச் சரிவர ஓர் அணுவும் பிசகாது நடாத்த, அந்த (இறை) இயற்கை இருக்கிறது. அது சரியாய்த் தான் நடாத்துகின்றது. நீர் உம்முடைய வேலையைப் பாரும்” என்று மகரிஷிகள் உணர்ந்து சொல்கிறார்கள். இதனை - இந்த “மகாவாக்கியத்தைக்” கேட்டுக் கந்தருவர் வீண்வம்பு மேசாமல், வீண் விடயங்களில் தலை வைக்காமல், இந்த வானமண்டலத்தில்  காதல் மீதுரக் கலந்து ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து நீந்தி விளையாடி வீணை வாசித்து நடமாடி மகிழ்ந்து வாழ்கிறார்களாம்.

வீண்கதைகள் பேசி, வம்பு வளர்த்து, மனத்தாபாப்பட்டுக் கொள்ளும் வழக்கம் படித்த குடும்பங்களிலும் இடையே நுழைந்து விடுகின்றது. அந்த வழக்கதை துணிவுடன் அகற்றி சிட்டு கணவன் மனைவியர் “கந்தருவர்” வாழ்வு வாழ வேண்டும். கந்தருவர் வாழ்வாவது பிறரைப் பற்றி வீண்வம்பு பேசாது, காதலொருமித்து இன்பமாக வாழ்தலே. இறைவனைச் சரணடைந்து வாழல் எனினும் மிகையாகாது.

எண்சுவை - மனிதன் அநுபவிக்கும் சுவைகள் எட்டுவகை. இவை நாவின் சுவையன்று. மனித உள்ளத்து உணர்வின் சுவை. ஒவ்வொரு மனிதரும் இச்சுவைகளை வெளிப்படுத்துவர். அதனை வள்ளுவர் மிகச்சுருக்கமாக அடுத்தது காட்டும் பளிங்கு போல என்கிறார். இச்சுவைகளைக் கொண்டு மனிதரை எடை போடலாம்.

அவை:
  1. நகை - சிரிப்பு
  2. அழுகை
  3. இழிவரல் - தீராநோய், வருமை இவற்றால் உளதாகும் தாழ்வு மனப்பான்மை.
  4. மருட்கை - அற்புதம்; பூனை ஒன்று ஆனையாகி நடந்து போதல். இப்படியே மனத்தை மருளப்பண்ணும் சத்துவம் [சுவை].
  5. அச்சம் - பயம்
  6. பெருமிதம் - அளவுக்கு மிஞ்சிய செல்வம் - கல்வி - அதிகாரம் - இவற்றால் வருவது.  இறுமாப்பு எனினும் ஒக்கும்.
  7. வெகுளி - கோபம்
  8. உவகை - மகிழ்ச்சி - மேலே சொன்ன கந்தருவச்சுவை. 

இந்த எண்சுவையும் தமிழர் கண்டது - தொல்காப்பியம் பகர்வது.
மனிதரில் நிகழும் சுவைகளை - உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை சத்துவங்கள் என்பர். இந்த எட்டுந்தாண்டிய நிலையில் ஒரு சுவை உண்டு. அது ‘சமநிலை’ - இந்தச் சமநிலை சான்றோரின் மனநிலை. மேலேயுள்ள எட்டில் ஒன்றும் இந்தச் சமநிலை உடையோனை அசைக்காது.
“செஞ்சா தெறியினும் செத்தினும் போழினும்
நெஞ்சஞ் சோர்ந்தோடா நிலை”

எல்லாம் அவன் செயல் என்று நன்றும் தீதும் அவன் தந்தவை. “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்ற மெய்யுணர்வாளர் கண்ட உண்மை நிலை. இந்த நிலையை நாம் பழகிக் கொண்டால் கவலையற்று மகிழ்வோடு வாழலாம். பக்திவயப்பட்டு, தானே அவனான நிலையில் கேட்டதெல்லாம் இறை தரும். 

2 comments: