Sunday 5 October 2014

குறள் அமுது - (96)


குறள்: 
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று                                - 1000

பொருள்:
பண்பு இல்லாதவனுக்கு கிடைத்த பெருஞ்செல்வம், பாத்திரத்தில் உள்ள அழுக்கால் நல்ல பால் திரிந்து போதல் போலப் பயனில்லாது போகும்.

விளக்கம்:
ஒன்றின் தன்மை அல்லது குணம் பண்பு என்ப்படும். சுடச்சுட ஒளிவிடுதல் பொன்னின் தன்மையாகும். அதனைப் பொன்னின் பண்பு என்றும் சொல்வர். அதுபோல் மனிதருக்கு என்று சில பண்புகள் இருக்கின்றன. அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சியோடு பழகல், இரக்கம், பிறருக்கு உதவுதல், தன்னை நேசிப்பதுபோல் ஏனைய உயிர்களையும் நேசித்தல் போன்றன மனிதப்பண்புகளாகும். அத்தகைய மனிதப் பண்பு இல்லாதோரை திருவள்ளுவர் பண்பிலான் என்கிறார்.

அத்தகைய பண்பில்லாத ஒருவனுக்கு வீடு, காணி, பொன், பொருள், அழகிய நல்ல மனைவி, அறிவுள்ள பிள்ளைகள் என்று பெரிய செல்வம் கிடைத்தாலும் அவை யாவும் வீணாய் அழிந்து ஒழிந்து போகுமாறு செய்வதையே அவன் தனது குணமாகக் கொண்டு தொழிற்படுவான். அவனுக்குக் கிடைத்த அரிய பொருட்களின் பெருமதியை அவன் அறிவதற்கு அவனது மனிதப்பண்பில்லாத்தன்மை அல்லது மூர்க்க குணம், கோபம், தான் எனும் அகங்காரம் என்பன இடம் கொடுக்காது. அதனால் அவன் தமது முன்னோரது சொத்தையும், சீர்தனமாகப் பெற்ற பொருட்களையும் மட்டுமல்லாமல் தான் உழைத்தவற்றையும் வீணே பகட்டுக்கு மயங்கி அழித்தும், ஊதாரித்தனமாகச் செலவு செய்வதோடு தான் பெற்ற பிள்ளைகளையும் மனைவியையும் துன்புறுத்துவதில் இன்பம் காண்பான்.


பண்பில்லாதவனின் இச்செயல்களால் அவனுக்குக் கிடைத்த அளப்பரிய நல்ல செல்வம் அழிந்து போதல், நல்ல பசுப்பாலை பாத்திரத்தில் ஊற்றி வைக்கும் போது அந்தப் பாத்திரத்திலுள்ள அழுக்கு - புளிப்பு - பற்றீரியா போன்ற தன்மைகளால் கெட்டு எவருக்கும் உதவாது திரைந்து போதல் போன்றது. அத்துடன் அப்படித் திரைந்த பால் இருக்கும் பாத்திரமும் உதவாது போதல் போல பண்பில்லாதவனின் குடும்பமும் மற்றவர்களின் முன் தலைகுனிந்து வாழவேண்டிய நிலைக்கு வரும். ஆதலால் நாம் நம் குழந்தைகளுக்கு மனிதப்பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment