Wednesday, 14 June 2017

மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி!


காளமேகப் புலவர் ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி’ என்று கூறியிருக்கிறார். ஏன்? எதற்கு? அப்படிக் கூறினார் பார்ப்போமே?

காளமேகப் புலவரைப் பார்த்த வேறொரு புலவர் “மும்மூர்த்தி என்று சொல்கின்ற வேதன், அரன், மால் மூவரின் பெயர்களும் வர அவர்கள் சாப்பிடும் கறி, உண்ணும் உணவு, வைத்திருக்கும் ஆயுதம், அணியும் அணிகள், ஏறித்திரியும் ஊர்திகள், வாழும் இடங்கள் யாவும் வர ஒரு வெண்பா பாடச் சொல்லிக் கேட்டார்.
அதற்குக் காளமேகப் புலவரும் 
“சிறுவ நளைபயறு நெந்னெற் கடுகுபூ
மறிதிகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
- (காளமேகம் தனிப்பாடல்: 36)
என்ற வெண்பாவைப் பாடினார். அந்தப் புலவரும் காளமேகத்தின் வென்பாவைத் தனிச் சொற்களாகப் பிரித்து
“சிறுவன் அளை பயறு செந்நெல் கடுகுபூ
மறி திகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெள்ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
என்று படித்தார். படித்தவர் திகைத்து ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவா கறி!’ என்று கேட்டார்.

காளமேகப் புலவரும் சிரித்துக் கொண்டே ‘பிரமா பயற்றையும், சிவன் பிள்ளைக் கறியையும், திருமால் வெண்ணெயையும் கறியாக தின்றனர். மூவருக்கும் முறையே செந்நெல், நஞ்சு[ஆலகால விடம்], மண்  உணவாகும். தண்டம், மறி, சக்கரம் ஆயுதமாகும். பூணூல், புள்ளியுள்ள பாம்பு, கௌத்துவமணி அணியாகும். அன்னம், வெள்ளை ஏறு, கழுகு வாகனமாகும். தாமரைபூ, கைலைமலை, பாற்கடல் வாழும் இடமாகும்’ என்று சொன்னார். அதனைக் கேட்ட புலவரும் மகிழ்ச்சியடைந்தார். 

பிரமா[வேதன்] சிவன்[அரன்] திருமால்[மால்]
கறி பயறு பிள்ளை[சிறுவன்] வெண்ணெய்[அளை]
உணவு செந்நெல் நஞ்சு[கடு] பூமி[கு]
ஆயுதம் தண்டம்[தண்டு] மான்மறி[பூமறி] சக்கரம்[திகிரி]
அணி பூணூல்[நூல்] பாம்பு[பொறியரவம்] கௌத்துவமணி[மணி]
ஊர்தி அன்னம் வெள்ளைஏறு[வெற்றேறு] கழுகு[புள்]
வாழுமிடம் தமரைப்பூ[பூ] கைலைமலை[கல்] பாற்கடல்[தாழம்-தாழி]
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment