Friday 2 June 2017

சித்திரக் கவிதை - 5

தேனை தேடு மைந்தனை! காத்திடு!!
வண்டிற்சில் சித்திரக் கவிதை
[எட்டாரை வட்டம்]

முருகா தொடர்ந்தே தீமையெலாம் மறவாமே
உருகா மனத்தேனை தீந்தமிழ் அகமுற
பருகிடத் தந்தே தீதல்லால் நன்றாய்
அருள் புரிந்திடு தீனையெண்ணி மயங்கா
முருகாம் உணர்வை பரிந்து அளித்து
மேன்மையுற முறைசெய் தெனையே காத்திடு!

இச்சித்திரக் கவிதை எட்டு ஆரை வட்டச் சித்திரக்கவிதை என்று சொல்லப்படும். இதனை வண்டிற்சில் சித்திரக்கவிதை என்றும் கூறுவர். ஒரு வட்டத்தை ஒத்த கோணமுடைய எட்டு ஆரைகளுடையதாகப் பிரித்து [வண்டிற்சில்லின்] ஒவ்வொரு ஆரைக்கும் ஆறு எழுத்துக்களாய் ‘தீ’ என்னும் எழுத்து அச்சாணியாக நிற்க குறட்டில் [அச்சாணியை சுற்றியுள்ள வட்டத்தில்] ஆரைக்கு ஓர் எழுத்தாக ‘தேனை தேடு மைந்தனை’ எனும் எட்டெழுத்துத் தொடர் வர, சூட்டில் [வெளிவட்டத்தில்] முப்பத்திரண்டு எழுத்துக்கள் நின்று எட்டாரை வட்டச் சித்திரக் கவிதையாகிறது.

சித்திரத்துக்குள் மறைந்திருக்கும் சித்திரக் கவிதையைப் பார்ப்பது எப்படி?
சூட்டின் [வெளிவட்டத்தின்] இடப்பக்க நடு ஆரையிலிருந்து நேரே வலப்பக்க ஆரையையும் சேர்த்து முதலடியைப் பார்த்து, வலஞ்சுழியாக 2ம், 3ம், 4ம் ஆரைக்குச் சென்று இரண்டாம், மூன்றாம், நான்காம் அடிகளையும் பார்வையிட்டு முதலடி ஆரம்பிக்கும் ‘மு’ எனும் எழுத்திலிருந்து வலமாக சூட்டைச் [வெளிவட்டத்தைச்] சுற்றி  வர 5ம், 6ம் அடிகளைப் பார்க்கலாம். குறட்டில் இருக்கும் ‘தேனை தேடு மைந்தனை’  முடியும் ஆரையின் தொடக்கச் சூட்டில்[வெளிவட்டத்தில்] ‘காத்திடு’ என இருப்பதையும் சேர்த்துப் பார்க்கவும். 

ஐம்புலச் சுவைத்தேனை 'தேடுகின்ற மைந்தனை காத்திடு' என்ற கருத்தில் எழுதியதாகும். ‘தேனை தேடு மைந்தனை’ என குறட்டில் வந்தது போல் நாம் விரும்பும் ஒரு செய்தி குறட்டில் [அச்சாணியைச் சுற்றியுள்ள வட்டத்தில்] வர எழுதுவது இச்சித்திரக் கவிதையின் சிறப்பாகும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment