Wednesday 24 October 2012

தருவாய் சிவகதி! தாயே சிவசக்தி!


  

                 பல்லவி
நடமிடும் பாதன் நாயகியே உன்றன்
நயனங்கள் திறந்தெனை ஆதரியே!
                                                    - நடமிடும் பாதன்
                  அனுபல்லவி
மடமையை நீக்கி மதியை வளர்த்திட
மானச குருவாய் வந்தமர்ந்தனையே!
                                                     - நடமிடும் பாதன்
                  சரணம்
பொங்கி வீழ் அருவியும் பூங்குயில் கீதமும்
சிங்கத்தின் சீற்றமும் சங்கத்தின் நாதமும்
துங்கமயில் ஆடலும் தங்கமான் துள்ளலும்
எங்கெங்கும் இசையென உள்ளத்து உள்ளவே
ஐங்கரனை முன்னமர்த்தி ஆர்வமுடன் எனைநோக்கி
பைங்கரம் தொட்டு பக்குவமாய் மடி இருத்தி
மங்கல வாழ்த்துரைத்து மகிழ்வோடு 
பைந்தமிழ் தானுரைத்தாய் பரிவோடு 
                                                      - நடமிடும் பாதன்

மீட்டிட்ட வீணையில் விரைந்தெழு நாதங்
கூட்டிட்ட இசையின் குழுமிய வேத
பாட்டிட்ட பரத நளின நவ
பாவ ராக தாளங்களும் பயில
மையிட்ட விழிகள் மருட்டிடவும்
மந்தாரப் புன்னகை மயக்கிடவும்
கையிட்ட வளைகள் குழுங்கிடவும்
கைத்தாளம் இடுவாய் கனியோடு
                                                      - நடமிடும் பாதன்

முருகாய் மலராய் மருவாய் மெருகாய்
அருவாய் உருவாய் அனைத்துமாய் நின்றாய்
கருவாய் உயிராய் கருத்தாய் கலந்தாய்
சீரும் கல்வியும் சிறந்தோங்கு செல்வமும்
பேரும் புகழும் பெருமையும் தரவே
குருவாய் வந்தாய் குறைகள் களைந்தாய்
திருவாய் திகழ்வாய் திருவருள் பொழிய
தருவாய் சிவகதி! தாயே சிவசக்தி!
                         சரணமம்மா...... அம்மா......

இனிதே,
தமிழரசி

[மகள்ஆரணியின் பரதநாட்டியத்திற்காக 2003ல் எழுதியது]

No comments:

Post a Comment